சட்டென்று மாறிய வானிலை... தமிழகத்தில் இடி மின்னலுடன் பெய்த ஜில் மழையால் கூல் ஆன மக்கள்
சென்னை: இரண்டு மாதமாக வெப்பம் கொளுத்தி வந்த நிலையில் சட்டென்று மாறிய வானிலையால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியும் மின்னலுமாய் கோடை மழை பெய்து பூமியையும், மக்களின் மனங்களையும் குளிர்வித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் மாதம் பெய்த மழைக்கு பின்னர், பிப்ரவரி மாதமே கோடை காலம் போல வெயில் மண்டையை பிளந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சில மாவட்டங்களில் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானதால் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது.
தேர்தல் காலம் என்பதால் வேறு வழியின்றி அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். இல்லையெனில் ஆளுக்கு ஒரு பக்கமாக கோடை வாசஸ்தலங்களுங்கு பறந்திருப்பார்கள்.
அக்னி நட்சத்திரம் தொடங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில் வெள்ளிக்கிழமை காலை தலைநகர் சென்னையில் சட்டென்று வானிலை மாறியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெப்பம் குறைந்தது.
கொட்டிய மழை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் மதியம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர், பள்ளிப்பட்டு பகுதிகளில் மேகமூட்டத்துடன் சூறாவளி காற்று வீசியது.
இடியும் மின்னலும்
காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் லேசான மழையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலமான காற்றும் வீசியது.
குளுமை பரவியது
கோவை, வேலூர் , திருவண்ணாமலை, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. கோடை காலத்தில் பெய்த மழையால் சட்டென்று குளுமை பரவியது.
ஜில் மழையால் கூல் ஆன மக்கள்
கோவையில் மாநகரப் பகுதி, துடியலூர், மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் வெள்ளிக்கிழமை மாலை சிறிது நேரம் பெய்த மழையால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
உதகையில் குளுர்ச்சி
உதகமண்டலத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் தொடங்கிய கன மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் ஊட்டி நகரின் பல இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், அரூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
கொடைக்கானலில் மழை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு 2 மணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்தது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு அரை மணி நேரத்துக்கு மேல் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குளிர்வித்த மழை
கரூர் மற்றும் அதருனகில் உள்ள வேலாயுதம் பாளையம், தான்தோன்றி மலை ஆகிய பகுதிகளிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை மக்களின் மனதை குளிர்வித்தது.
இன்றும் மழை பெய்யும்
தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது