ஆ.ராசாவிற்கு சொந்தமான வீடு,அலுவலகங்களில் சிபிஐ. அதிரடி சோதனை... 6 கி. தங்கம், 20 கி. வெள்ளி பறிமுதல்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிற்கு சொந்தமான வீடு,அலுவலகங்கள் பெரம்பலூர், அரியலூர், சென்னை, டெல்லி உட்பட 20 இடங்களில் சி.பி.ஐ அதிரடிப் படையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 6 கிலோ தங்கம் 20 கிலோ வௌ்ளி , வங்கிக் கணக்குகள், வங்கி டெபாசிட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2011- ஆம் ஆண்டு சிபிஐ தொடர்ந்த 2 ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்தபோது அவரது தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, டி.பி.ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் போது தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா
பாணு உள்ளிட்ட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், 1999-2010 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ 27.9 கோடி சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. 2 ஜி வழக்கின் தொடர்ச்சியாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று காலை முதலே டெல்லி, பெரம்பலூர், சென்னை, என நாடு முழுவதும் 20 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஆ.ராசாவின் வீடு, அவரது சகோதரர் வீடு, அவரது நண்பர் சாதிக் பாட்சாவியின் மனைவி ரேகா பாணு வீடு, சாதிக் பாட்சாவின் நண்பர் சுப்புடுவின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது 6 கிலோ தங்கம் 20 கிலோ வௌ்ளி , வங்கிக் கணக்குகள், வங்கி டெபாசிட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.