ஜீயரையே கோபப்படுத்திட்டீங்களேய்யா... ராஜேந்திர பாலாஜி பதறல்
ஜீயரே சோடா பாட்டில் வீசுவேனு சொல்ற அளவுக்கு அவரை ஏன் கோபப்படுத்துறீங்க என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜீயரே கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு ஆய்வறிக்கையில் வெளிநாட்டு எழுத்தாளர் ஆண்டாள் குறித்து கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தார்.
இது ஆண்டாளை தவறாக விமர்சிப்பது போன்ற அர்த்தத்தை கொடுப்தாக கூறப்படுகிறது. இதற்காக வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
கல்லெறிய தெரியும்
இந்நிலையில் அவர் வைரமுத்துவை கண்டித்து நடத்திய பொதுக் கூட்டத்தில் சாமியார்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்துவிட வேண்டாம் என்றும் எங்களுக்கு சோடா பாட்டில் வீச தெரியும் என்றும் தெரிவித்திருந்தார்.
நெட்டிசன்கள் மரண கலாய்
ஜீயரின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இவரது பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தலைவர்கள் கண்டனம்
ஜீயரின் பேச்சு வன்முறையை தூண்டுவது போல் உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஜீயரே இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அமைச்சர் ஜெயக்குமாரும் ஜீயர் பேசியது பொறுப்பேற்ற பேச்சு என்று கூறியிருந்தார்.
ஜீயரை ஆதரித்த ராஜேந்திர பாலாஜி
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ஜீயர் கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு. பல பிரச்னைகள் இருக்கையில் வைரமுத்து, விஜயேந்திரர் குறித்து பேசுவது தேவையற்றது என்றார் அவர்.