திருப்பூர், திருச்சி, தி நகர் சம்பவங்களும் கூட ரஜினி கடுமையாக கண்டிக்க வேண்டியவைதான்!
சென்னையில் போலீஸ் மீது நடந்த தாக்குதல் மட்டுமல்ல, திருப்பூர், திருச்சி, தி நகர் சம்பவங்களும் கூட ரஜினி கடுமையாக கண்டிக்க வேண்டியவைதான்.
Recommended Video
சென்னை: போலீஸ் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், திருச்சி, திருப்பூர், திநகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் மீது நடந்த கொடும் தாக்குதலை கண்டிக்க மறந்தது, மறுப்பது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் நேற்று நடத்திய போராட்டத்தால் அண்ணா சாலையே போர்க்களமானது. இந்த போராட்டத்தின்போது போலீஸ்காரர்களை சிலர் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோவை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் சீருடையில் உள்ள போலீஸ்காரர்களை சிலர் தாக்கியது வன்முறையின் உச்சம் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உண்மையில் கண்டனத்துக்குரியதுதான். ஆனால் மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பி விட்டுள்ளார் ரஜினி.
பெண் மீது தாக்குதல்
திருப்பூரில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்ணின் கன்னத்தில் டிஎஸ்பி பாண்டியராஜன் பளார் என்று ஒரு அறை விட்டார். இதில் அந்த பெண்ணின் காது கேட்காமல் போனது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண் என்றும் பாராமல் அடித்த டிஎஸ்பிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன, ஆனால் ரஜினியிடம் இருந்து அப்போது (ஏன், இப்போது வரை) ஒரு வார்த்தை கூட வரவில்லை.
பெண் பலி
திருச்சியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி கணவருடன் உஷா என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கணவர் ராஜா ஹெல்மெட் போடவில்லையாம். இதற்காக அந்த வண்டியை போலீஸ்காரர்கள் மடக்கினர். ஆனால் அவர் நிற்காமல் சென்றதால் அவரை மற்றொரு வண்டியில் துரத்திக் கொண்டே சென்ற போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் , தம்பதியின் வண்டியை எட்டி உதைத்ததில் வண்டி நிலைதடுமாறி தம்பதி கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற வேன் உஷா மீது ஏறியதில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்திலும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ரஜினி.
தாய் மீது தாக்குதல்
தி.நகரில் பிரபல துணிக்கடையில் துணி எடுத்துவிட்டு பிரகாஷ் என்ற இளைஞர் தாய், தங்கையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூவராக சென்றதால் போலீஸார் அவரை மடக்கி நிறுத்தியபோது இரு தரப்பும் மோதிக் கொண்டது. கைகலப்பாக மாறியது. கடுமையான வார்த்தைகளால் பேசிய போலீஸார், தடுக்க வந்த பிரகாஷின் தாயையும் நெஞ்சில் அடித்து தள்ளி விட்டனர். மேலும் அந்த இளைஞரை பாட்ஷா படத்தில் ஆனந்த்ராஜை ரஜினி கட்டி வைத்து அடிப்பது போல் கடுமையாக கையை முறித்து தாக்கினர். அந்த சம்பவத்தை பார்த்து ஊரே வேதனைப்பட்டது. ஆனால் ஒரு கண்டனமும் ரஜினியிடமிருந்து வரவில்லை.
இதுவல்லவோ வன்முறை
போலீஸ்காரரை பொதுமக்கள் அடித்தால் அது நிச்சயம் பெரும் கண்டனத்துக்குரியது. அடக்கி ஒடுக்கப்பட வேண்டியது. அதில் ரஜினி சொல்வது போல சந்தேகமே இல்லை. ஆனால் மக்களுக்குக் காவலாக இருக்கக் கூடிய போலீஸாரே வன்முறையில் ஈடுபடுவது சரியில்லையே. மேற்கண்ட 3 சம்பவங்களிலும் பெண்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு உயிரும் பறி போனது அநியாயமாக. இதையெல்லாம் என்னவென்று சொல்வது. இந்த சம்பவங்களைக் கண்டிக்காமல் ரஜினி மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பது மக்கள் கேள்வி.
நல்லா பாருங்க
இன்னும் கொஞ்சம் நாளில் கட்சி தொடங்கவுள்ள ரஜினியை அவரது ரசிகர்கள் வருங்கால முதல்வர் என்று அழைக்க தொடங்கிவிட்டனர். ஆனால் அவர் இதுவரை மக்களோடு மக்களாக நின்று எதையும் செய்ததாக நினைவில்லை. மக்களின் தலைவராக அவர் மாறும் முயற்சிகளையே கூட அவர் தொடங்கவில்லை. தொடக் கூட இல்லை. மக்களின் மனதை அவர் எப்போது தொடுகிறாரோ அப்போதுதான் அவரது ரசிகர்களின் ஆசை நிறைவேறும்.