திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி நீக்கப்பட்டது ஏன்? சுதாகர் விளக்கம்
திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாயராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜ் சுயநலத்தோடு செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை : திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜ் சுயநலத்தோடு செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக அந்த மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். தர்புராஜ் நீக்கத்திற்கு மற்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், திண்டுக்கல் மாவட்ட, நகர, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 147 பேர் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.
விரைவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ரஜினிகாந்திடம் ஒப்படைக்கப்போவதாகவும் அவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் தம்புராஜ் நீக்கப்பட்டது ஏன் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : ரஜினி மக்கள் மன்றம் தூய்மையான அரசியலை முன்னிறுத்தி பொதுமக்களுக்கு சேவை புரிவதற்காக தொடங்கப்பட்டுள்ள அமைப்பு. இதில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் மன்றத்தின் குறிக்கோளுக்கு ஏற்ப செயல்படாதபட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மன்றத்தை சரியான பாதையில் நடத்திச்செல்வது தலைமையின் கடமை.
தம்புராஜ் தலைமைக்கு விரோதமாக செயல்பட்டார்
தம்புராஜ் செய்தது தலைமைக்கு விரோதமானது என்றாலும் அவரை தற்காலிகமாக நீக்கவும், தம்புராஜ் தவறை உணரும் வரை வேறு யாரையும் அந்த பொறுப்பிற்கு நியமிக்கக் கூடாது என்றும் ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், தம்புராஜ் தவறை உணராமல், நிர்வாகிகளை தூண்டிவிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தி அவதூறு பரப்பி மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வது ஏற்புடைய செயல் அல்ல.
களங்கம் ஏற்படுத்த முயற்சி
பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.
பொறுப்புக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்
எனவே ரஜினிகாந்தால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட மன்ற நிர்வாகிகள் அனைவரும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நியாயம் செய்யும்வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது ஆணைக்கும் விருப்பத்திற்கும் இணங்க நிர்வாகிகள் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதகா சுதாகர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.