மதுரையில் மாநாடு நடத்தப் போகிறார் ரஜினி.. ராகவா லாரன்ஸ் தகவல்
எம்எல்ஏவாக எனக்கு ஆசையில்லை. ரஜினிக்கு காவலராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: மதுரையில் ரஜினியின் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை டிசம்பர் 31ஆம் தேதியன்று அறிவித்தார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட, மாநகர் தலைமை நற்பணி மன்றங்கள் சார்பில் ரஜினியின் 68வது பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஒன்றிய-நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா அழகர்கோவிலில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்க்கு ஆளுயர மாலை அணிவித்து ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், 12 வயதில் இருந்து ரஜினியின் ரசிகராக உள்ளேன். மதுரை மண் அரசியல் பிரவேசத்துக்கு முக்கியமான தளமாக இருப்பதால் அவர் மதுரையில் இருந்து அரசியல் தொடங்குவார் எனக் கருதுகிறோம்.
மதுரையில் மாநாடு
மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாடு விரைவில் நடைபெறும்.
அவரது ஆன்மிக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைப்படுத்துவது இல்லை. அனைத்து சாதி, மதங்களையும் ஒருங்கிணைப்பது ஆன்மிக அரசியல்.
ரஜினிக்கு காவலன்
தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அவரது அரசியல் அழைத்துச் செல்லும். எம்எல்ஏவாக எனக்கு ஆசையில்லை. அவருக்கு காவலராக இருக்க ஆசைப்படுகிறேன் என்றும் கூறினார்.
ரஜினி சுத்தப்படுத்துவார்
ரஜினி வந்த பின்னர் அரசியல் சுத்தமாகும். அரசியல் எளிமையாகும். கட்சி கொள்கை பற்றி கேட்டதற்கு குழந்தை தனமாக தலை சுத்திருச்சி என்றார். அதை தவறாக பேசுகின்றனர். அவர் கட்சி தொடங்கும் முன்பே இப்படி என்றால் கட்சி தொடங்கிய பின்னர் நிஜமாகவே பலருக்கு தலை சுத்தப் போகிறது என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.