"ஆன்மீக" ரஜினிக்கு சரியான சான்ஸ்.. திருப்பரங்குன்றம், திருவாரூரில் களம் காண்பாரா?
Recommended Video
சென்னை: திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் ரஜினிகாந்தோ அல்லது அவரது கட்சியினரோ போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த போஸ் சமீபத்தில் காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியும் கடந்த 7-ஆம் தேதி காலமானார். இதையடுத்து இந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த இரு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் இல்லாவிட்டால் அதற்குள் கட்சியையாவது தொடங்குவாரா என்ற பேரவாவும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
ரஜினி அறிவிப்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அது அறிவிப்போடு நின்றுள்ளது. இந்நிலையில் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுடைய அவர் ஆன்மிக அரசியலை முன்னெடுக்க போவதாக கூறியுள்ளார்.
வெற்றிடம்
மூத்த தலைவர்களான ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்துவிட்டனர். இதனால் தமிழகத்தில் ரஜினிகாந்த் கூறிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகளாக கூறிக் கொள்ளும் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் என்ன எம்ஜிஆரா ஜெயலலிதாவா என்று கேள்வி எழுப்பியதன் மூலம் அவர்கள் வெறும் சும்மா என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் ரஜினி.
ரஜினி போட்டியிடுவாரா
ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினி ஆன்மிக தலங்களான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பமாக உள்ளது. இதனால் அந்த இடைத்தேர்தல்களுக்குள் கட்சியை தொடங்குவாரா, போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
மக்கள் செல்வாக்கு
ரஜினி என்ன எம்ஜிஆரா என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் எம்ஜிஆர் போல் ரஜினிக்கும் கமலுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இந்த நேரத்தில் மக்கள் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளவாவது ரஜினி போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உள்ளூர் மக்கள்
உள்ளாட்சி தேர்தல்களில் பொதுவாக உள்ளூரை சேர்ந்தவர்களுக்கே மக்கள் வாக்களிப்பது இயல்பான ஒன்று. எனவே அதற்கு முன்னதாக அவர் பரீட்சார்த்த அடிப்படையில் போட்டியிடலாம். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரஜினி பங்கேற்பாரா அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கே இன்னும் நேரம் இருக்கிறது என்று சொன்னது போல் இந்த இடைத்தேர்தல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாரா என்பது அந்த "அருணாசலத்துக்கே" வெளிச்சம்.