ஆட்சியாளர்களுக்கு எதிராக வாய் திறக்காத ரஜினிகாந்த்.. சாமானியர்களுக்கு எதிராக மட்டும் பொங்குவது ஏன்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இரு முக்கியமான விஷயங்களால், மிகப்பெரிய அமளி துமளியே நடந்தது. ஆனால் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்த ரஜினிகாந்த், அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து 'பாசிச பாஜக ஒழிக' என்று சோபியா என்ற மாணவி கோஷமிட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து அவர் மீது காவல் துறையில் புகார் அளித்து கைது செய்ய வைத்த தமிழிசையின் நடவடிக்கை ஆகியவை தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஊடகங்களில் தொடர் விவாதங்கள் நடந்தன. பாஜக, அதிமுக தவிர்த்து, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் தமிழிசைக்கு கண்டனம் தெரிவித்து விட்டனர்.
சோபியா பற்றி கருத்து
ரஜினிகாந்த் நண்பரும் சக திரையுலக பிரமுகருமான கமல்ஹாசனும், தமிழிசை செயல்பாட்டுக்கு, தனக்கே உரித்தான மறைமுக பாணியிலாவது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில்தான் இன்று படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரிடம், சோபியா விவகாரம் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் ரஜினிகாந்த். இதேபோன்று இரு நாட்களாக நடைபெற்ற சிபிஐ ரெய்டு குறித்த கேள்விக்கும் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
மத்தியிலும், மாநிலத்திலும் வம்பு ஏன்
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை சேர்ந்த தமிழிசையின் செயல்பாட்டுக்கும் சரி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அமைச்சர் வீட்டில் நடந்த ரெய்டு குறித்தும் சரி, கருத்து தெரிவிக்க மறுத்ததன் மூலம் ரஜினிகாந்த், தான் ஒரு எப்போதுமே ஆட்சியாளர்களின் ஊதுகுழலாகவே செயல்பட்டு வருவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்.
சாமானியர்களுக்கு எதிராக ஆக்ரோஷம்
ரஜினிகாந்த் ஆக்ரோஷமாக கருத்துக் கூறும் விஷயங்களை எல்லாம் எடுத்து பார்த்தீர்கள் என்றால், அது சாமானிய மக்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் எதிராகத்தான் இருக்குமே தவிர, அரசு இயந்திரத்துக்கு எதிராக அவர் குரல் கொடுத்தது கிடையாது. "என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்.. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு தலைவர் கண்டனம் தெரிவித்தாரே, உங்களுக்கு தெரியாதா" என்று சிலர் கேட்கக் கூடும். ஏதோ மறந்தால் போல அந்த விஷயத்திற்கு, அவர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் உடனே சுதாரித்துக்கொண்டார். அடுத்த நாளிலேயே அளித்த பேட்டியில், தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டன என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அரசு இயந்திரம் என்றால் கோபப்படுவார்
சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்று காவிரி விவகாரத்திற்காக போராட்டம் நடைபெற்றபோது, அதற்காக களமிறங்காத ரஜினிகாந்த், காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார் என்றபோது பொங்கி எழுந்தார். இது வன்முறையின் உச்சம் என்று கருத்து தெரிவித்தவர்தான் இந்த உச்ச நடிகர்.
தென்ன மரத்தில் ஒரு குத்து, ஏணி சின்னத்தில் ஒரு குத்து
தூத்துக்குடி சென்று திரும்பிய பிறகு சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால், நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றார். ஆனால் திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு நிலம் தர மறுத்த போது, ட்விட்டரில் ஒரு கோரிக்கையை அதுவும் தாழ்மையாக வைத்த ரஜினிகாந்த், கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு "ஒருவேளை தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருந்தால் நான் போராட்டம் நடத்தி இருப்பேன்" என்றார். நிலம் ஒதுக்க முடியாது என்று தமிழக அரசு முதலில் கூறிய போது போராட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்ததன் மூலம், ரஜினிகாந்த் ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டார். நிலம் ஒதுக்கப்பட்டு விட்டது, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது என்றதும், "மேல்முறையீடு சென்றிருந்தால் நான் போராடி இருப்பேன்" என்று கூறி, அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்பு கொண்ட திமுக தலைமையையும் குளிர்விக்க அவர் மறக்கவில்லை. தென்ன மரத்தில் ஒரு குத்து, ஏணி சின்னத்தில் ஒரு குத்து என்று இரு கட்சிகளுக்கும் ஓட்டளிக்கும் வடிவேலு பட காமெடிதான், இவரது பல்டியை பார்த்ததும் பலருக்கு நினைவு வந்தது.
தப்புதானே
அதேநேரம் அவர் மறந்துவிட்ட ஒன்று உள்ளது. போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று பொன்மொழி உதிர்த்த ரஜினிகாந்த்தான், மெரினாவில் கருணாநிதிக்கு, இடம் கிடைக்காவிட்டால் நானே போராட்டம் நடத்தி இருப்பேன் என்றும் மறந்து தெரிவித்துவிட்டார் போலும். எப்போதுமே சாமானியர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ரஜினி, அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த சோபியாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று நினைத்தது கேள்வி கேட்டது, அந்த நிருபரின் தவறுதானே?