ஆணாதிக்கத்தை தகர்த்தவர் ஜெயலலிதா.. அவர் ஒரு மகாத்மா... ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
ஆண் ஆதிக்கம் மிகுந்த சமுகத்தில் தனது முயற்சியால் முன்னுக்கு வந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா என்ற பெரிய ஆத்மா மகாத்மா ஆனது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு இதய முடக்கம் காரணமாக காலமானார். 6ஆம் தேதி காலையிலிருந்து சென்னை ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பல தமிழக முன்னணி நடிகர்,நடிகைகள் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.இருப்பினும் பல நடிகர்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டு படப்பிடிப்புகள் கலந்து கொண்டிருந்ததால்,ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி கடந்த 7ம் தேதி மரணமடைந்தார்.
நடிகர் சங்கம் இரங்கல் கூட்டம்
தென்னிந்திய நடிகர் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமான கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் சங்கத் தலைவர் நாசர்,நடிகர்கள் விஷால்,பொன்வண்ணன்,சிவக்குமார் உள்பட பல்வேறு நடிக,நடிகர்கள் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய நடிகர்,நடிகைகள்,ஜெயலலிதா குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், 1996 தேர்தலில் நான் பேசிய பேச்சால் ஜெயலலிதாவின் மனது புண்பட்டது.
வைரம் போன்றவர் ஜெ.,
இருந்தபோதிலும் எனது மகளின் திருமணத்திற்கு தனது அழைப்பை ஏற்று அவர் கலந்து கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வைரம் போன்றவர். போராட்டங்களை வாழ்க்கையாக கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த்.
ஜெ., ஆத்மா மகாத்மா ஆனது
பொதுவாழ்க்கைகாக தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர். ஆணாதிக்க மிகுந்த சமுகத்தில் தனது முயற்சியால் முன்னுக்கு வந்தவர். ஜெயலலிதா என்ற பெரிய ஆத்மா மகாத்மா ஆனது. சோதனைகளை சாதனையாக்கி காட்டியவர் ஜெயலலிதா.அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்என்று ரஜினி உணர்வுபூர்வமாக பேசினார். இரங்கல் கூட்டத்தில் பேசிய பலரும், ஜெயலலிதா, சோ உடனான தங்கள் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.