வெடிகுண்டு கலாசாரம்... தமிழகத்தையே அதிர வைத்த ரஜினிகாந்தின் முதலாவது அரசியல் 'தெறி' பேச்சு இதுதான்!
தமிழக அரசியல் களம் பற்றி 22 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு இது.
Recommended Video

சென்னை: அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31-ந் தேதி அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பும் பேச்சுகளும் புதியதும் அல்ல.
தமிழகத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகர் அந்தஸ்தை தொட்டது முதலே அரசியல் பயணம் குறித்து பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆர்.எம். வீரப்பனுடனான ரஜினியின் சினிமா பயணம் ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறதா என்கிற சந்தேகப் பார்வை 40 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.
இதன் உச்சம்தான் 1995-ம் ஆண்டு நிகழ்ந்தது. பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழா 14.7.1995-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் ஆர்.எம். வீரப்பன். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய காலத்தில் இருந்தே அவருக்கு ஏழாம் பொருத்தமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இந்த பின்னணியில் நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் புயலையே கிளப்பியது என்பது மிகையல்ல.

ரஜினி சங்கடம்
அந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது: இந்த விழாவில் முக்கியமான ஒரு பிரச்னை பற்றிப் பேச விரும்புகிறேன். அண்மையில் டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு என் மனதை மிகவும் சங்கடப்படுத்தி விட்டது.

வெடிகுண்டு கலாசாரம்
அதுமட்டுமல்ல அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழக முதலமைச்சருக்கு இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாசாரத்தை ஒழிக்கச் சட்டம் கொண்டு வாருங்கள்.

தூக்குதான் சரியானது
சிங்கப்பூரில் போதைமருந்து வைத்திருந்ததால், அவர்களை விசாரணை இல்லாமல் தூக்கில் போடுகிறார்கள். அதேபோல் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பவர்களை விசாரணை இன்றி தூக்கில் போடவேண்டும். ஒரு 10 பேரைத் தூக்கில்போட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும்.

போலீஸ் அடக்கி காட்டும்
குற்றம்செய்தவர்களைப் பிடித்துத் தண்டியுங்கள். ஆனால் ஒரு குற்றவாளிகூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே ஏன்? தமிழகப் போலீஸார் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. திறமைவாய்ந்த அவர்களிடம் அந்த இடத்தைக் கொடுங்கள். தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கிக்காட்டுவார்கள்.

குடிமகனாக சொல்கிறேன்
தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரமே இல்லையென ஆக்கிவிடுவார்கள். தமிழகத்தில் இனி வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால், அதற்கு அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாகச் சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் ஒருவனாகச் சொல்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
ரஜினிகாந்தின் இந்த தடாலடி பேச்சு தமிழக அரசியலில் மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஜெயலலிதாவை வீழ்த்த ரஜினியை முன்வைத்து ஆர்.எம்., வீரப்பன் திட்டம் வகுக்கிறார்.. .ஆழம் பார்க்கிறார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாகவே ரஜினிகாந்துக்கு ஆளும் அதிமுக அரசு மறைமுக நெருக்கடிகளைத் தந்தது. இதனால்தான் 1996 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா ஆட்சிக்கு மீண்டும் வந்தால் தமிழகத்தை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெடித்து சிதறினார் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications