அரசியலில் காலம்தான் முக்கியம்.. காலம் வரும்போது எல்லாம் மாறும்: ரஜினி பரபரப்பு பேச்சு
காலம் வரும்போது சினிமாவும் அரசியலும் தானாக மாறும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: காலம்தான் மிக முக்கியம், காலம் வரும்போது சினிமாவும், அரசியலும் தானாக மாறும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கடந்த மே மாதத்துக்கு பிறகு ரஜினிகாந்த் 2-ஆவது முறையாக கடந்த 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதன்படி முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று 4-ஆவது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி சந்தித்து வருகிறார்.
சந்திப்பு முடிய 2 நாட்கள்
அப்போது அவர் கூறுகையில், இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது. உங்களுடன் சந்திப்பு முடிவடைய 2 நாள் இருப்பதைத்தான் சொல்கிறேன்.
சுவாமிகள் ஆசி
கோவையில் எனக்கு அதிக நண்பர்கள் உள்ளனர். எனது குருநாதர்களில் ஒருவர் சுவாமி சச்சிதானந்தர். பழனி சுவாமிகள் ஆசியால் பிறந்தவர் சச்சிதானந்தர்.
மந்திர உபதேசம்
சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தில் உள்ளார். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர்.
ஆன்மீகத்தை கற்று கொடு, மதத்தை கற்றுக் கொடுக்காதே என்றவர் சச்சிதானந்தர். கோவை நிகழ்ச்சியில் சிவாஜியுடன் நான் கலந்து கொண்ட போது என்னை பார்த்து
ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது சிவாஜி இது உன் காலம் என்று என்னை வாழ்த்தினார்.
மரியாதை எப்படி?
நாம் எப்படி வாழ்கிறோமே அதை வைத்துத்தான் மரியாதை கிடைக்கும். புகழ், குணாதிசயத்தை வைத்துதான் மரியாதை கொடுப்பார்கள். எம்ஜிஆர் அப்படிப்பட்ட குணாதிசயத்தை கொண்டிருந்தார். காலம் தான் மிக முக்கியம். சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி , காலம்தான் முக்கியம் என்றார்.