7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராமர் பாலம் - ஆய்வுகள் சொல்லும் உண்மை
ராமர் பாலம், கட்டுக்கதை அல்ல என்றும் அது 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவித்தனர்.
Recommended Video

சென்னை: ராமர் பாலம் என்பது இயற்கையாக உருவானதோ கட்டுக்கதையோ அல்ல என்றும் அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டனர்.
இதிகாசமான ராமாயணத்தில் இலங்கை அரசன் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற போது கடலை கடந்து செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டது. ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
3 கிலோ மீட்டர் அகலமும் 30 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட இந்த ராமர் பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். ராமேஸ்வரம் புனித தலமாக இந்துக்களினால் வணங்கப்படுகிறது. ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் ராமர் பாலம் அமைந்துள்ளது.

சேது சமுத்திர திட்டத்திற்கு இடையூறு
சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் கனவு திட்டம். பல ஆண்டுகளாக ஆய்வு பணியில் இருந்து வருகிறது. கடலுக்கு அடியில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றினால்தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சேது கடலில் உள்ள ராமர் பாலத்தை அகற்றாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

மணல் திட்டுக்களா?
ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்றும், கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகள் இப்படி பாலமாக தோன்றியதாகவும் மற்றொரு சாரார் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல என்றும் அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தனர்.

மனிதர்கள் கட்டிய பாலம்
அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர். ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

மனிதர்கள் கட்டிய பாலம்
இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறுகையில், ராமர் பாலம் பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். இந்த கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று விஞ்ஞானி கூறியுள்ளார்.

உண்மையான பாலம்தான்
கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் பாலம் கட்டப்பட்டது உண்மைதான் என்று கூறி வீடியோவும் வெளியிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமர் பாலத்தை அகற்ற முடியாது
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்க வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு கூறியது. 2014ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ராமர் பாலத்தை அகற்ற முடியாது என மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சேது சமுத்திர திட்டத்தை வேறு பாதையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications