"பெண்கள் மீதான பலாத்காரம் அதிகரித்துவிட்டது, தமிழகத்தில் ஒழுங்கு இல்லை"- ராமகோபாலன் சீற்றம்
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து ராம கோபாலன் கூறியதாவது: தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் மத அமைப்புகளுக்கு வருகின்ற நிதி கண்காணிக்கப்பட வேண்டும். எந்த காரணத்திற்காக நிதி வருகிறதோ அதற்குத்தான் செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மதப்பிரிவை வைத்துதான் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை மாற்றி, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில், காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு நடைபெறுகிறது. ஆனால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். மின் உற்பத்தியாளர்களின் குறையை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. குற்றவாளிகளுக்கு சமூகமே தக்க தண்டனை வழங்க வேண்டும். குற்றச்சாட்டுகளை கூறினால் முதல்வர் உடனே புள்ளி விவரங்களை தயாரித்து வாயை அடைக்கிறார். புள்ளிவிவரமும் உள்ளது, அதே நேரம் சமூகத்தில் கொடுமைகளும் நடக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடித்து தீர்வு காணப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்ற வார்த்தையில் சட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் ஒழுங்கு இல்லை.இவ்வாறு ராம கோபாலன் தெரிவித்தார்.