மியாட் மருத்துவமனையில் 18 நோயாளிகள் இறந்ததில் மர்மம்: சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: மியாட் மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட மின்தடை உள்ளிட்ட காரணங்களால் மியாட் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்தனர்.

40 நோயாளிகளா?
அரசு மற்றும் மியாட் மருத்துவமனைத் தரப்பில் இந்த எண்ணிக்கை கூறப்படும் நிலையில், உண்மையில் இந்தவர்களின் எண்ணிக்கை 40க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் நடந்தவை குறித்து வெளியாகியுள்ள உண்மைகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

சட்டத்துக்கு புறம்பான கட்டிடம்
மியாட் மருத்துவமனையில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு முழுக்க முழுக்க அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் ஆகும். அம்மருத்துவமனைக்கான கட்டடங்களே சட்டத்திற்கு புறம்பாகத்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அடையாற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் 3 தளங்கள் தரைமட்டத்திற்கு கீழே அமைந்திருக்கின்றன.

தார்மீக நெறியில்லை
மியாட் மீது ஏற்கனவே கூறப்படும் குற்றச்சாற்றுகளையும், இப்போது புதிதாக எழுந்துள்ள குற்றச்சாற்றுகளையும் வைத்துப் பார்க்கும் போது மருத்துவ தார்மீக நெறிமுறைகளை அறவே கடைபிடிக்காத மருத்துவமனை (Most Unethical Hospital) இது என்பது உறுதியாகியிருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஓடியது தப்பு
மியாட் மருத்துவமனையில் கடந்த ஒன்றாம் தேதி வெள்ளம் புகுந்ததுமே அங்கு பணியாற்றி வந்த பெரும்பாலான மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு (Abandoned) ஓடி விட்டனர். இது மருத்துவ நெறிகளுக்கு எதிரான செயலாகும்.

சிபிஐ விசாரணை
எனவே, மியாட் சாவுகள் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மியாட் மருத்துவமனை நிர்வாகிகள் கைது செய்யப்படுவதுடன், முதல்கட்ட விசாரணை முடிவடையும் வரை அம்மருத்துவமனை செயல்பட தடை விதிக்க வேண்டும்.

ரூ.1 கோடி
அதுமட்டுமின்றி, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சமாக தலா ரூ.1 கோடி இழப்பீட்டுடன், அவர்கள் செலுத்திய மருத்துவ கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications