ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாமக இன்று நடத்தியது.
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் இளைய, அடுத்த தலைமுறைக்கு சமூக நீதி தேவை. ஒட்டுமொத்த தமிழகத்துக்கு சமூக நீதி தேவை. தற்போதைய சமுதாய அமைப்பு சமூக நீதி இல்லாததாக இருக்கிறது.
ஒரே விதமான கல்வி
எல்லோருக்கும் ஒரேவிதமான கல்வி கொடுத்திருந்தால் இடஒதுக்கீடு தேவை இருந்திருக்காது. தந்தை பெரியார் முன்வைத்தது வகுப்புவாரி பிரதிநிதித்துவம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்
ஜாதிதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு அளிக்கலாம் என சொன்னது உச்சநீதிமன்றம். அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக கருணாநிதி, ஜெ.வை பார்த்தேன்... ஆனால் எந்த பலனும் இல்லை.
வல்லரசாக இருக்க வேண்டும்
இந்தியா அறிவுசார்ந்த வல்லரசாக இருக்க வேண்டும். நம்மை ஏமாற்ற நினைக்கிறார்கள் என்பதற்கு நீட் தேர்வு உதாரணம். சாக்கடை கட்சிகளுக்குத்தான் தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்களா? 2016-ல் தமிழகத்தில் மாற்றம் வந்திருக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டீர்கள்.
பாமகவுக்கு வாய்ப்பு வாருங்கள்
கொள்ளையடிப்பதில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை மாறினால்தான் மாற்றம் வரும். இந்திய மாநிலங்களுக்கு ஒருகாலத்தில் வழிகாட்டியாக இருந்தது தமிழகம். இன்று இந்திய மாநிலங்களில் கடைசி மாநிலமாகிவிட்டது. தமிழகம் முதல் மாநிலமாக மாற பாமகவுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் அவர்.