ஆப்பிள் ஜூஸ் சாப்பிட்டாராமே ராமமோகன் ராவ்!!
நெஞ்சு வலி என்று கூறி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமமோகன ராவ் நார்மலாக இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: நெஞ்சு வலி என்று கூறி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவுக்கு அபாயகரமான அளவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆப்பிள் ஜூஸெல்லாம் குடித்து நல்லபடியாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காண்டிராக்டர், மணல் வியாபாரி என பலமுகம் கொண்ட கறுப்புப் பண முதலை சேகர் ரெட்டியுடன் கூட்டு சேர்ந்து பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சிக்கியுள்ளார் ராவ். அவரது தலைமைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை ஓ.பன்னீர் செல்வம் அரசு இன்னும் சஸ்பெண்ட் செய்யாமல் உள்ளது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவரான சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பல நூறு கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ரெட்டிக்கும் ராம மோகன் ராவுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புதன்கிழமையன்று அதிகாலையில் ராம மோகன் ராவ் வீடு, அவரது மகன் விவேக், சம்பந்தி வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
வருமான வரி சோதனை
ராம மோகன ராவின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. சம்பந்தி வீடு, மகன் வீடுகளிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகையை கைப்பற்றியுள்ளனர். ராம மோகன ராவின் மகனான விவேக், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததை ஒத்துக் கொண்டார்.
காத்திருக்கும் சிபிஐ
ராம மோகன் ராவ் வீட்டில் கைப்பற்றிய பொருட்கள், ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது உறுதியானால் அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதோடு நேற்றே அவரைக் கைது செய்ய சிபிஐயும் தயாராக இருந்தது.
நெஞ்சு வலி
இதற்கு வசதியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராம மோகன் ராவ், அவரது மகன் விவேக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. விவேக் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான் திடீரென ராமமோகன ராவ் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்து விட்டார். அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். நெஞ்சு வலி காரணமாக அவர் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
நார்மலாகவே இருக்கிறார்
ஆனால் உளவுத்துறையினர் உள்ளே புகுந்து விசாரித்தபோது அவருக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் சாதாரண மன அழுத்தம் காரணமாகவே அவரை சேர்த்துள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆப்பிள் ஜூஸெல்லாம் சாப்பிடுகிறாராம். இயல்பாகத்தான் இருப்பதாகவும் உளவுத்துறையினர் கூறுகின்றனர்.
விரைவில் கைது
சேகர் ரெட்டியின் கூட்டாளியான ராவ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் இதுபோன்ற பல நெஞ்சு வலிகளை கடந்த காலத்தில் பார்த்தவர்கள் என்பதால் உரிய உத்தியை வகுத்துக் கொண்டு அதன் பின்னர் ராவைத் தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.