இலங்கையிலிருந்து 5 தமிழக மீனவர்கள் விடுதலை - டெல்லி வந்தனர்- மோடியைச் சந்திக்கவில்லை
டெல்லி: இலங்கை அரசால், விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் இன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.
சில சம்பிரதாயதங்களுக்காக மீனவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருப்பதாக அக்பருதீன் தெரிவித்தார். இதனால் மீனவர்கள் டெல்லியிலிருந்து சொந்த ஊர் திரும்பவுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டஸ், லாங்லெட், பிரசாத், எமர்சன், வில்சன் ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு இறுதி வரை இந்த வழக்கு நடைபெற்றது. இதன் பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கின் விசாரணை மாற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 30ம் தேதி மீனவர்கள் 5 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவும் இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.
மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மீனவர்களை விடுதலை செய்ய முடியாது. மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால்தான் பொதுமன்னிப்பு வழங்க வசதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு ஐகோர்ட் நீதிபதிகள் விஜித் கே.மலால்கோடா, நவாஸ் ஆகியோர் கொண்ட அப்பீல் பெஞ்ச் முன்பு தமிழக மீனவர்கள் 5 பேர் சார்பில் ஆஜரான வக்கீல், மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை நேற்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, தூக்கு தண்டனை எதிர்த்த மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டதாக நேற்று காலை அதிகாரபூர்வ அறிவிப்பை இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டது.
இலங்கை அமைச்சர்கள் ஆறுமுக தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோர் நேற்று காலை 9 மணி அளவில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து 5 மீனவர்களை விடுதலை செய்வது பற்றி ஆலோசனை நடத்தினர். மேல்முறையீட்டு மனு வாபஸ் பெற்ற நிலையில், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், ஏற்கனவே அவர்கள் மீது போதை பொருள் வழக்கு இருப்பதால் 5 மீனவர்களும் கைதிகளாகத்தான் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள். இதனால் தமிழகத்திலும் அவர்கள் சிறை யில் இருக்கும் நிலைதான் இருப்பதால் அந்த வழக்கை முழுவதுமாக வாபஸ் பெற்று மீனவர்கள் மீது எந்த வழக்கும் இன்றி முழுமையாக விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே உடனடியாக 5 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து 5 மீனவர்களும் நேற்று மாலை 4 மணியளவில் வெலிக்கடை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். உடனடியாக அனைவரும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் விடுதலை குறித்து செய்தியாளர்களிடம், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
முதலில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே முடிவு செய்து அதற்கான உத்தரவை அளித்திருந்தார். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் 5 மீனவர்களும் இந்திய சிறையில் தான் இருக்க முடியும். இதுதொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் ஆறுமுக தொண்டமான் உள்ளிட்ட தலைவர்கள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அவர்கள் மீண்டும் சிறை யில் இருக்கும் நிலை உள்ளது. எனவே அவர்களை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.
இதனையடுத்து தனது நிலைப்பாட்டை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றிக்கொண்டு 5 மீனவர்கள் மீதான வழக்கையும் வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார் என்று செந்தில் தொண்டமான் கூறினார்.
5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டது ராமேஸ்வரம், புதுக் கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரும் இன்று காலை 8.50 மணிக்கு திருச்சிக்கு விமானம் மூலம் வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் 5 மீனவர்களையும் வரவேற்க அவர்களது உறவினர்கள் திருச்சி விமானநிலையத்தில் குவிந்தனர். ஆனால் அந்த விமானத்தில் மீனவர்கள் வரவில்லை.
காலையில் இருந்தே அவர்கள் திருச்சியில் காத்திருக்கும் நிலையில் 3 மணி விமானத்தில் மீனவர்கள் திருச்சிக்கு வந்துவிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசியில் மீனவர்கள் அனைவரும் முதலில் டெல்லி அழைத்துச் செல்லப்படுவதாகவும், அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர்கள் சந்திக்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து திருச்சி விமானநிலையத்தில் காத்திருக்கும் உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர். சோகத்துடன் அவர்கள் சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீனவர்கள் அனைவரும் இன்று இரவுக்குள் சொந்த ஊர் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3 வருவடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி மீனவர்கள் வீடுதிரும்புவது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவுக்குள் சொந்த ஊர் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3 வருவடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி மீனவர்கள் வீடுதிரும்புவது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி வந்தனர்
இந்த நிலையில் இன்று மாலை மீனவர்கள் ஐவரும் டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் டெல்லி வந்தனர். அவர்கள் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அக்பருதீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரையோ, வெளியுறவுத்துறை அமைச்சரையோ சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. சில சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மோடி - ராஜபக்சேவுக்கு மீனவர்கள் நன்றி
டெல்லி வந்து சேர்ந்த மீனவர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். எங்களை விடுவிப்பதற்காக முயற்சித்த பிரதமர் மோடிக்கும், ராஜபக்சேவுக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம். இந்தியா வந்து சேர்ந்ததர்காக மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.