திருச்சி திமுக மாநாடு: டெல்லி செங்கோட்டை வடிவில் நுழைவு வாயில்
சென்னை: திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள திமுக மாநாடு நடைபெற உள்ள நுழைவு வாயில் டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.மாநாட்டின் பந்தல் முகப்பு நாடாளுமன்றம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
தி.மு.க. 10-வது மாநில மாநாடு திருச்சி பிராட்டியூர் அண்ணா நகரில் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த திருச்சி மாநாடு நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கூட்டணி பற்றிய அறிவிப்பு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு என்று பல்வேறு எதிர்பார்ப்புகளை தாங்கியுள்ளதால் இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
200 ஏக்கர் நிலத்தில்
தி.மு.க. மாநில மாநாட்டுக்காக பிராட்டியூர் ரெட்டைமலை அருகே 10 லட்சம் பேர் அமரும் வகையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விறுப்பான பணிகள்
திருச்சி தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநாடு வரவேற்புக்குழு தலைவருமான கே.என்.நேரு, மாநாட்டு திடலில் தங்கியிருந்து இரவு, பகலாக மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
ஸ்டாலின் ஆய்வு
இதற்கிடையே கடந்த 6-ந்தேதி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு சென்று பணிகளை பார்வையிட்டார். மேலும், மாநாட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது 50 சதவீத பணிகள் நிறைவுபெற்று உள்ளன.
டெல்லி செங்கோட்டை
மாநாட்டு நுழைவு வாயில் டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்படுகிறது. மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல் 1100 அடி நீளத்திலும், 600 அடி அகலத்திலும், மாநாட்டு மேடை 200 அடி நீளத்திலும், 80 அடி அகலத்திலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
ராமஜெயம் பெயரில்
மாநாட்டு கொடி மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயரத்தில் ஒரே கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. கொடி மேடை மறைந்த கே.என்.ராமஜெயம் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமைப்பு
மாநாட்டு பந்தலின் முகப்பு தோற்றம் பாராளுமன்ற வடிவில் உருவாகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கும் வகையில், மாநாட்டு மேடையின் அருகே ஓய்வு அறையும் உருவாக்கப்படுகிறது. மேலும் தி.மு.க. மாநாட்டு முகப்பு பந்தல் அமைக்கும் பணிகளை சினிமா ஆர்ட் கலைஞர்கள் முகாமிட்டு கவனித்து வருகிறார்கள். பந்தல், மேடை, முகப்பு அமைப்பதற்கே பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.