காட்டுத் தீ.. ஹெலிகாப்டரில் இரவும் மீட்பு பணி தொடரும்.. கமாண்டோக்கள் விரைவு: நிர்மலா சீதாராமன்
தேனி: தேனி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி இரவும் தொடரும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இம்மலைப்பகுயில் 40க்கும் மேற்பட்ட கல்லூரி, மாணவ, மாணவிகளும், சென்னையை சேர்ந்த ட்ரெக்கிங் சுற்றுலா பயணிகள் சிலரும் ட்ரக்கிங் சென்றிருந்தபோது, திடீரென காட்டுத் தீ பரவியது. இதையடுத்து மீட்பு பணியில் தீயணைப்பு துறையினருடன், போலீசாரும் ஈடுபட்டனர்.

விமானப்படையினரை உதவி செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரவிட்டார். இதையடுத்து கோவை, சூலூர் மையத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் விரைந்தன. ஆனால் இரவு ஆகிவிட்டதால் மீட்பு பணி முடங்கியது.
நிர்மலா சீதாராமன் இரவு 8.30 மணியளவில் கூறுகையில், 8 மணியளவில் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை காலை சூரிய உதயமானதும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்படும்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களும், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டு, மலையடிவாரம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மலையடிவாரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களைவிட கிராமத்து மக்கள்தான் மீட்பு பணியில் அதிகம் பயன்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இரவு 10.30 மணியளவில் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், இரவும் ஹெலிகாப்டரில் மீட்பு பணிகள் தொடரும் என்று தெரிவித்தார். 10 கமாண்டோக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications