கொத்துக் கொத்தாக சரிந்து விழுந்த கட்டடம்… மீண்டவர்கள் பேட்டி
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு எப்படி விழுந்தது, தாங்கள் எப்படி உயிர் தப்பினோம் என்பது குறித்து உயிருடன் மீண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது வாழ்நாள் முழுவதும் இதை மறக்க முடியாது என்று கூறிய அவர்கள், கடவுள் புண்ணியத்தால்தான் தாங்கள் உயிருடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
விழுந்த கட்டடத்திற்குள் சிக்கித் தவித்த இவர்களை மீட்புப் படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
28ம் தேதி பயங்கரம்
மவுலிவாக்கத்தில் ஜூன் 28ம் தேதி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து போனது. மண்ணோடு மண்ணாக தரைமட்டமாகிப் போனது. இதில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.
திகில் அனுபவம்
மீட்கப்பட்டவர்களில் ஒருவரான மதுரை திருமங்கலம், மருதமுத்து என்ற கட்டுமானத் தொழிலாளர் கூறுகையில், சம்பவத்தன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று இடிச்சத்தம் கேட்டது.
கொத்துக் கொத்தாக விழுந்த சிமெண்ட் துகள்கள்
தொடர்ந்து கட்டிடத்தின் மேலிருந்து சிமெண்ட் துகள்கள் கொத்துக்கொத்தாக விழுந்தன.
கண்மூடித் திறப்பதற்குள்
கண்மூடி கண் திறப்பதற்குள் கட்டிடம் சரிந்து விழுந்தது. மண் குவியலுக்கு அடியில் நான் குப்புற விழுந்து கிடந்தேன். கை, கால்களை கூட அசைக்க முடியவில்லை. எங்கும் ஒரே இருட்டு.
கடவுள் அருளால் பிழைத்தேன்
எப்படி மீட்கப்பட்டேன்? எப்படி மருத்துவமனையில் வந்தேன்? எவ்வாறு தேறினேன்? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பிழைத்திருக்கிறேன் என்றால் அது கடவுளின் அருளால் தான். வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்க மாட்டேன் என்றார்.
தூண்களுக்கிடையே சிக்கிய கந்தசாமி
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. 53 வயதான இவர் விபத்து நடந்த இடத்தில் உள்ள மரக்கடையில் பணியாற்றுகிறார். அவர் கூறும்போது, கட்டடம் சரிந்து எங்களது கடையின் மீது விழுந்தது. இதில் கடையின் 2 தூண்களுக்கு நடுவில் இடிபாடுகளுக்கிடையில் நான் சிக்கிக்கொண்டேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. தற்போது வரை பிழைத்தேன் என்பதை நான் நம்பவில்லை என்றார்.
நெடுமாறன் நேரில் பார்த்தார்
இதற்கிடையே, மீட்புப் பணிகளை உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குநர் கெளதமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.