சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்ஜேடி எம்.பி. முகமது தஸ்லிமுதீன் காலமானார்
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. முகமது தஸ்லிமுதீன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.
சென்னை: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. முகமது தஸ்லிமுதீன் சுவாச கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். அவருக்கு வயது 74.
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் எம்.பி. முகமது தஸ்லிமுதீன். இவர் பீகார் மாநிலத்தில் உள்ள ஆராரியா லோக்சபா தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.
இவர் கடந்த 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற லோக்சபா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஸ்லிமுதீன் 7 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை எம்.பி.யாகவும், கடந்த காலங்களில் மத்திய உள்துறை இணையமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.