ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ராணி மேரி கல்லூரியில் மின்னணு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் பரபரப்புடன் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 24ஆம் தேதி ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.
ஆர்.கே. நகரில் நேற்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நேற்று மாலையே மெரினா கடற்கரைசாகாமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அனைத்து இயந்திரங்களும் தனி அறையில் வைக்கப்பட்டு அந்த அறை சீலிடப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் வெளி நபர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. வரும் 24ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.
ராணி மேரி கல்லூரி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் நுழைந்து விட முடியாத அளவுக்கு ராணிமேரி கல்லூரி போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இரவு பகலாக பாதுகாப்பு
ராணிமேரி கல்லூரியில் நேற்று இரவில் இருந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷிப்டு முறையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை அங்கு துணை ராணுவத்தினர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
ஆர்.கே. நகர் யாருக்கு
24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வேட்பாளர்கள், முகவர்கள், ஊடகத்தினர் வருவதற்காக தனித்தனியே வழிகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் 77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக்குகள் யாருக்கு பதிவாகியுள்ளன. வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லப்போவது யார் என்று நாளை மறுதினம் தெரிந்து விடும்.
தீவிர கண்காணிப்பு
இதனிடையே சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், ஆர்.கே.நகர். தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறினார். மேலும் சென்னை ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, வாக்கு எண்ணிக்கை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.