நெல்லையில் கல்வித்துறை விழாவில் ரூ. 37 லட்சம் மோசடி: போலீசார் வழக்குப்பதிவு
நெல்லை: நெல்லையில் கல்வித் துறை விழாவில் ரூ.37 லட்சம் மோசடி செய்த 10 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் என 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தனித்திறன் போட்டிக்கான பரிசளிப்பு விழா 2013ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி நெல்லையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், மாநில என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் உஷாராணி, பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும் உணவு, மேடை அலங்காரம், விழாமலர் தயாரித்தல், வரவேற்பு என பல்வேறு பணிகளையும் வெவ்வேறு தனியார் பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களிடம் தலா ஐந்து ரூபாய் வீதம் 23 லட்சம் ரூபாய் வசூலித்தனர்.
பள்ளி நிர்வாகத்திடமும் நன்கொடை என்ற பெயரிலும், நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட என தனியாக ரூபாய் வசூலித்துள்ளனர். மொத்தம் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.
இந்த வசூலில் மேற்கண்ட விழாவின் வரவு, செலவு கணக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தமிழக முதல்வருக்கும், கல்வித்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியிருந்தார். அந்த புகாரின் பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம் வசூலித்த 40க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், உதவி கல்வி அலுவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாநகர குற்றப்பிரிவு போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி உள்ளிட்ட கல்வி மாவட்ட அதிகாரிகள், 10 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் என 15க்கும் மேற்பட்டோர் மீது மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications