அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைப்பு... மீட்டு தாருங்கள் - சண்முகநாதன் எம்எல்ஏ புகார்
ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்டு தர வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி சண்முகநாதன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தரப்பினரால் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்டு தர வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசுப் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் அழைத்து சென்ற போது தப்பி வந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன், நேராக ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, கூவத்தூரிலுள்ள ஒரு சொகுசு விடுதியில் வலுக்கட்டாயமாக சிறைப்பிடிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார் எஸ்.பி. சண்முகநாதன்.
இந்தநிலையில் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த எஸ்.பி. சண்முகநாதன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 8ஆம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த பின்னர் எங்களை கொத்தடிமைகள் போல நடத்தினார்கள் என்றார். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் சொகுசு பஸ்சில் அழைத்து சென்றனர். நான் அதிலிருந்து தப்பி வந்து விட்டேன் என்றார்.
என்னுடைய புகாரை காவல்துறை ஆணையர் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே அலுவலகத்தில் உதவி ஆணையரிடம் அளித்து விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார். விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி. சண்முகநாதன் கூறியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு வசதியான விடுதி இருக்கும் போது அவர்களை என் ரிசார்ட்டில் தங்க வைக்க வேண்டும் என்றும் சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.