படு ஜோராக விற்பனையாகும் காலாவதி பொருட்கள்.. கரூரிலிருந்து "கலவர" ரிப்போர்ட்!
உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு சட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கண்காணிப்பு அதிகாரி மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அலுவலகம் போதுமான வசதிகள் இன்றி காணப்படுகிறது. தனிதட்டச்சர், பணியாளர்கள் போன்ற இடங்கள் நிரப்பப்படவில்லை. கரூர் மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய வாகன வசதி வழங்கப்படவில்லை. கரூர் வட்டார பகுதியில் தான் இவர்கள் அடிக்கடி ஆய்வு நடத்துகின்றனர். உணவு மட்டுமின்றி மருந்து பொருட்களையும் இவர்கள் ஆய்வு செய்யலாம்.
உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பதிவு எண்ணிக்கை குறித்த விபரங்களை ஒவ்வொரு வாரமும் மேலதிகாரிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த விபரங்களை சேகரிப்பதில் உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
மாவட்ட அளவில் காலாவதியான உணவு பொருகள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. உணவு பொருட்களில் உற்பத்தி நிறுவனம், உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படவேண்டும். இவ்வாறு குறிப்பிடாத தின்பண்டங்கள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலைமை தொடர்கிறது. அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். பெரிய அளவில் இத்துறையின் செயல்பாடு இல்லை என நுகர்வோர் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் நகராட்சியில் சுகாதார பிரிவு உள்ளது. இவர்கள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் நகர்ப்பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் காலாவதியான பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுகிறது. பிற மாவட்டங்களில் பெரிய அளவில் தரமற்ற மாம்பழங்கள் பறிமுதல், காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள் கண்டுபிடித்து அழிக்கப்படுகிறது. ஆனால் இங்கு பறிமுதல் மட்டுமே நடைபெறுகிறது. இப்பணியும் முழுமையான அளவில் இல்லை.
இதனால் நிறுவனம் உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பிஸ்கட்கள், மிக்சர், இனிப்பு வகைகள் பாக்கெட்டுகளில் ஏராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி குறித்த அதிகார வரம்பு பற்றி அறிவிக்கப்படாததால் கலப்படபொருள் விற்பனை, காலாவதியான பொருள், மருந்துப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றை தடுக்கும்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி மன்ற நிர்வாகங்களுடன் இணைந்து உணவுபாதுகாப்புத்துறை செயல்பட உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுக்கின்றனர்.