மேற்கு மண்டலத்தை கலக்கும் மணல் காண்ட்ராக்டர் ஆறுமுகசாமி வீடு, அலுவலகங்களிலும் ஐடி ரெய்டு
கோவை: மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான 7 இடங்களில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளனர் வருமான வரித்துறையினர்.
கோவையில் காலை 6 மணி முதல் ரெய்டு ஆரம்பித்தது. ஆறுமுகசாமிக்கு சொந்தமான கோவை ராம்நகரிலுள்ள அலுவலகத்தில் 6 பேர் கொண்ட குழு ரெய்டு நடத்துகிறது.
ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள ஆறுமுகசாமி வீடும் ரெய்டுக்கு தப்பவில்லை. அவினாசி சாலையிலுள்ள இவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
தொடர் ரெய்டு
அதேபோல, மேட்டுப்பாளையத்திலுள்ள செந்தில் ப்ரூட்ஸ், அன்னூரிலுள்ள ட்ரஸ்ட் அலுவலகம், ராம்நகரிலுள்ள திரையரங்கம் ஆகியவற்றிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு, பவானிசாகர் அடுத்த இக்கரைத்தப்பள்ளி கிராமத்தில், கோவை மணல் குத்தகைதாரர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான செந்தில் பேப்பர் போர்டு காகித ஆலையிலும் ரெய்டு நடக்கிறது.
அதிரடி ரெய்டு
ஆகமொத்தம், ஆறுமுகசாமிக்கு சொந்தமான 7 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனைகள் நடக்கின்றன. ரெய்டு நடைபெறும் இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணல் கான்ட்ராக்டர்
ஆறுமுகசாமிதான் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய மணல் ஒப்பந்ததாரர். அரசு மணல் குத்தகைகளை இவர்தான் பெரும்பாலும் எடுத்து மேற்கொள்வார். ஆறுமுகசாமி, சசிகலாவின் ஆதரவாளராக அறியப்படுகிறார். இதன் தொடர்ச்சியாகவே, ஆறுமுகசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.
கேரள அதிகாரிகள்
ஆறுமுகசாமி வீட்டில் சோதனை நடத்தும் குழுவில் கேரளாவை சேர்ந்த ஐடி அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். அதிக இடங்களில் சோதனை நடத்துவதால் கேரளாவிலிருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.