எடப்பாடி பழனிச்சாமி அரசில் எகிறும் மணல் கொள்ளை… தமிழிசை பகீர் புகார்
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 30 மணல் குவாரிகளை மூடிவிட்டு 70 மணல் குவாரிகளைத் திறந்து கொள்ளை மேல் கொள்ளை அடிக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்
புதுக்கோட்டை: தமிழகத்தில் 30 மணல் குவாரிகளை மூடிவிட்டு 70 மணல் குவாரிகளைத் திறந்து கொள்ளை விலைக்கு மணல் விற்கப்படுவதாக பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் திடுக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாஜக சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான வளர்ச்சி மிக்க நிர்வாகம் தேவை என நினைக்கிறோம்.

தூர் வாரப்படவில்லை
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.100 கோடியில் நீர் நிலைகளை தூர் வாருகிறோம் என அறிவித்தப்படி பணிகள் நடைபெறவில்லை. குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள 4 ஏரிகளும் தூர்வாரப்படவில்லை.

ஆற்று மணலுடன் கடற்கரை மணல் கலப்படம்
30 மணல் குவாரிகளை மூடிவிட்டு 70 மணல் குவாரிகளை திறந்துள்ளனர். ஒரு லோடு மணல் ரூ.10 ஆயிரம் என்பதும், ஆற்று மணலுடன் கடல் மணலை கலப்படம் செய்து விற்பதும் மணல் விவகாரத்தில் அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

அவசரப்படும் ஸ்டாலின்
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சனையை விட ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அவசரப்படுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். எப்போதும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும்.

காங்கிரஸ் சொல்வது வேடிக்கை
ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசர் பாஜகவை குறை கூறுவது வேடிக்கையானது.

திருமாவளவனுக்கு கண்டனம்
பிரதமர் மோடியை தரக்குறைவாக திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு பாஜக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

எஸ்சி ஆணைய தலைவர் முருகன்
தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முருகன் என்பவரை மோடி நியமனம் செய்துள்ளார். அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாஜக மாறும்.

பாஜக வளர்ச்சிக்கு முழு நேர ஊழியர்கள்
கட்சியின் வளர்ச்சிக்காக நியமிக்கப்பட்ட முழுநேர ஊழியர்கள் 12,500 பேர். அவர்கள் அனைவரும் வருகிற 23-ந்தேதி முதல் பணியாற்ற உள்ளனர் என்று தெரிவித்தார் தமிழிசை.












Click it and Unblock the Notifications