குமரி: மணல் கடத்தலை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல்- அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கைது!
கன்னியாகுமரி: மணல் கடத்தல் லாரியை மடக்கிப் பிடித்த தாசில்தாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான நபரின் தேவதாஸ் என்பதாகும். இவர், கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
கேரளாவுக்கு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கேரளாவுக்கு செல்லும் சாலையில் 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், திருவனந்தபுரம் சாலை வழியாக ஒரு லாரியில் மணல் கடத்தப்படுவதாக விளவங்கோடு தாசில்தார் ஜெயன் கிறிஸ்டிபாய்க்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தாசில்தார் கிறிஸ்டிபாய், ஞாராம்விளை என்ற இடத்தில் லாரியை மடக்கி பிடித்து ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த லாரி, பிடிபட்ட தகவல் கிடைத்ததும் தேவதாஸ், விளவங்கோடு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, பணியில் இருந்த தாசில்தார் கிறிஸ்டிபாயை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சக பணியாளர்கள் முன்னிலையில் நடந்த சம்பவத்தால் தாசில்தார் கிறிஸ்டிபாய் கடும் வேதனை அடைந்தார். இது குறித்து விளலங்கோடு சிறப்பு துணை தாசில்தார், கலியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தேவதாஸ் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரது காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தேவதாசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தாருக்கு ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.