சங்கரன்கோவில் கோயில் வெள்ளி பல்லாக்கு மாயம்.... அதிர்ச்சியில் பக்தர்கள்!
சங்கரன்கோவில், சங்கரநாராயணசாமி கோயில் வெள்ளிப் பல்லாக்கு மாயமானதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் வெள்ளி பல்லாக்கு மாயமான விவகாரத்தில் துணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி தபசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலில் தினமும் நடக்கும் பள்ளியறை பூஜைக்கு பயன்படுத்தும் சுமார் 24.5 கிலோ எடையுள்ள வெள்ளி பல்லாக்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் துணை ஆணையராக இருந்த சுவாமிநாதன் கடந்த ஜூலை மாதம் சிவகங்கை மாவட்ட துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய துணை ஆணையர் செல்லத்துரையிடம் கோயில் பொறுப்புகளை சுவாமிநாதன் ஒப்படைத்தார்.
அதன் பிறகு, புதிய நிர்வாகி செல்லத்துரை கோயிலில் இருப்பு பொருட்களை சரிபார்த்தபோது வெள்ளி பல்லாக்கு மற்றும் முக்கிய ஆவணங்கள் மாயமானது தெரியவந்தது. ஆனால், அவை கடந்த டிசம்பர் மாதம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
துணை ஆணையர் சுவாமிநாதன் பணியாற்றிய காலத்தில் வெள்ளிப் பல்லாக்கு மாயமானதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருந்தபோதிலும் வெள்ளிப் பல்லாக்கு காணமல் போனது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சுவாமிநாதனின் சஸ்பெண்ட் ஆணை திரும்பப் பெறப்பட்டு தற்போது அவர் சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் மீண்டும் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இது பக்தர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications