முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு செயலராக சாந்த ஷீலா நாயர் நியமனம்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவு சிறப்பு செயலராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல்வரின் தனிப்பிரிவு செயலர்களாக கே.என். வெங்கட்ராமண் உட்பட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு செயலர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா மற்றும் ராம மோகன் ராவ், வெங்கட்ராமன், ராமலிங்கம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு செயலராக இன்னோசென்ட் திவ்யாவும் பணியாற்றினர்.
சட்டசபை தேர்தல் நடைபெற்ற மே மாதம் ஷீலா பிரியாவுக்கு கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகால பணிநீட்டிப்பு முடிவடைந்தது. அவர் பணிநீட்டிப்புக்கு அனுமதி கோரியும் தமிழக அரசு முடிவெடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக முதல்வரின் தனிப்பிரிவு செயலராக இருந்த ராமமோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் முதல்வரின் தனிப்பிரிவுக்கான செயலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் முதலாவது தனிப்பிரிவு செயலராக கே.என். வெங்கட்ரமணன், 2-வது தனிப்பிரிவு செயலராக ஷிவ்தாஸ் மீனா, 3-வது தனிப்பிரிவு செயலராக விஜயகுமார், 4-வது தனிப்பிரிவு செயலராக ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு செயலராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் பதவி வகித்தவர் சாந்த ஷீலா நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் உற்பத்தி ஆணையராக ககன் தீப்சிங் பேடி
மேலும் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ்; வேளாண் உற்பத்தி ஆணையராக ககன் தீப் சிங் பேடி; ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா; சுற்றுச்சூழல் வனத்துறை முதன்மை செயலாளராக அதுல்யா மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.