சசி பெருமாள் மரண வழக்கு: எஸ்பி, டிஐஜி நேரடியாக விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காந்தியவாதி சசி பெருமாளின் மரணம் தொடர்பான வழக்கை எஸ்.பி மற்றும் டி.ஐ.ஜி. மேற்பார்வையில் நடத்தி 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலை பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி, கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி, சசிபெருமாள் 50 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சசிபெருமாள் மரணம் தொடர்பாக அவரது மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார், அதில், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,அதிகாரிகளின் அலட்சியப் போக்காலேயே தனது தந்தை உயிரிழந்துள்ளதாகவும், தந்தையின் மரணம் குறித்த உண்மை நிலையை அறிய தற்போது பணியாற்றும் நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். அதனை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,சசிபெருமாள் வழக்கு விசாரணையை எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, அதன் விசாரணை அறிக்கையை குறிப்பிட்ட நீதிமன்றத்தில் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று சசிபெருமாளின் மகன் விவேக் தரப்பிலான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.