சசிகலாவின் உருக்கமான அறிக்கை நாளை வெளியாகிறது! பெங்களூருவில் விவேக் முகாம்!
அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்தி சசிகலா பெயரில் நாளை ஒரு அறிக்கை வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இளவரசி மகன் விவேக் பெங்களூருவில் முகாமிட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவில் திடீர் திடீரென உதயமாகும் கோஷ்டிகளை முன்வைத்து சசிகலா ஒரு உருக்கமான அறிக்கையை நாளை வெளியிட உள்ளார். இந்த அறிக்கையைப் பெறுவதற்காக பெங்களூருவுக்கு இளவரசி மகன் விவேக் சென்றுள்ளாராம்.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர துடித்தார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் அவரது அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. தற்போது பெங்களூருவில் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.
சிறைக்கு செல்லும்போது அக்காள் மகன் தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார். அவரும் முதல்வர் நாற்காலியை நோக்கி நகரத் தொடங்கினார். ஆனால் ஆர்கே நகர் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.
ஒதுக்கப்பட்ட தினகரன்
இதனிடையே அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என கூறப்பட்டது. இதனால் தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி கோஷ்டி அறிவித்தது. தினகரனும் தாம் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
திஹார் சிறையில்...
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். தற்போது ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகளிடையே பேச்சுவார்த்தையே நடைபெறாமல் இணைப்பு முயற்சி தோல்வியைத் தழுவிவிட்டது. இது போதாதென்று புதிய புதிய கோஷ்டிகளும் அதிமுகவில் உருவெடுத்து வருகின்றன.
கொடநாடு மர்மங்கள்
அதிமுகவின் அக்கப்போர் ஓய்ந்துவிடாது என்ற நிலையில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து இக்கொலை, கொள்ளையில் தொடர்புடைய போயஸ் கார்டன் பங்களாவின் மாஜி ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் மரணமடைந்தார். மற்றொரு குற்றவாளி சயான் விபத்தில் சிக்கினார். அவரது மனைவி, குழந்தை உயிரிழந்தனர்.
நானும் இருக்கேன்...
இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு பரபரப்பு வந்து கொண்டே இருக்கும் நிலையில் நானும் இருக்கேன்.. நானும் இருக்கேன் என்பதற்காக சசிகலாவுக்காக ஒரு உருக்கமான அறிக்கை ரெடி செய்யப்பட்டுள்ளதாம். நமது எம்ஜிஆரில் இருந்துதான் இந்த அறிக்கை ரெடியாகி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். இதற்கு சசிகலா ஓகே சொல்லியிருக்கிறார்.
உருக்கமான வேண்டுகோள்
இந்த அறிக்கையைப் பெறுவதற்காக இளவரசி மகன் விவேக் பெங்களூருவில் முகாமிட்டுள்ளார். சசிகலா பெயரில் நாளை வெளியாகும் அறிக்கையில், ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் இடம்பெற்றுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.