எல்லாமும் தினகரனால் வந்த வினை... சொந்தங்களும் 'எஸ்கேப்'- சிறையில் புலம்பும் சசி
சென்னை: எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க நினைக்காமல் அரவணைத்து போக தினகரன் முயற்சிக்காமல் போனதே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என பெங்களூரு சிறையில் சசிகலா புலம்பியிருக்கிறார்.
தினகரனை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார் சசிகலா. அரசியலில் ஏற்பட்ட சறுக்கல், குடும்ப உறவுகளின் அடுத்தடுத்த மரணம், மருத்துவமனையில் கணவர் என கடும் மன உளைச்சலில் இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை சரியாகக் கையாண்டிருந்தால், கட்சியை விட்டு என்னை நீக்கியிருக்க மாட்டார்' என சந்திக்க வருபவர்களிடம் புலம்பி வருகிறார் சசிகலா. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று சசிகலாவை சந்திப்பதற்கு முடிவு செய்தார் தினகரன்.
அவருடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் செல்வதாக இருந்தது. ஆனால், தினகரனை சந்திப்பதையோ முன்னாள் எம்.எல்.ஏக்களை சந்திப்பதையோ சசிகலா விரும்பவில்லை. சசிகலா அணிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து எப்படி தப்புவது? அடுத்தகட்ட வியூகம் என்ன என பலவித கேள்விகள் அவர்களைச் சுற்றி வருகின்றன.

சொந்தங்கள் எஸ்கேப்
எந்தநேரமும் மாநில அரசின் உளவுத்துறை தீவிரமாகக் கண்காணிப்பதால், முக்கியமான உறவுகள் பலரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டனர். சிறையில் என்ன மனநிலையில் சசிகலா இருக்கிறார் என்பதை விசாரித்தோம்.

வெளியில் தலைகாட்ட முடியலை
ஜெயலலிதா இருந்தவரையில் திரைமறைவில் செல்வாக்குடன் வலம் வந்த சசிகலா உறவுகள் எல்லாம், இப்போது கைது நடவடிக்கைக்குப் பயந்து போய் உள்ளனர். இத்தனைக்கும் எங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என வெளியில் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

யார் யார்?
தினகரனின் மனைவி அனுராதா மட்டுமே அவ்வப்போது சிறைக்குச் சென்று வருகிறார். பேரக் குழந்தைகளைப் பார்க்காமல் இளவரசியால் இருக்க முடியாது என்பதால், அவரது மகள்களும் மகனும் அவ்வப்போது சிறைக்குச் சென்று வருகின்றனர்.

படுசோர்வில் சசிகலா
கடந்த சில நாட்களாக மிகுந்த சோர்வில் இருக்கிறார் சசிகலா. கல்லீரல் செயலிழந்து மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் நடராசன். மகாதேவன் மரணம், சந்தானலட்சுமியின் திடீர் மரணம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்தது என அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரை வாட்டி வருகிறது. இந்தக் கோபத்தை தினகரன் மீது காட்டி வருகிறார்.

கவிழ்க்கும் பலம் இல்லை
ஓரிரு நாட்களுக்கு முன்பு இதுகுறித்துப் பேசிய சசிகலா, எந்த வகையில் நாம் சென்றாலும் நஷ்டம் நமக்குத்தான். பின்னடைவுக்குக் காரணம், நாம் உருவாக்கிய ஆட்சியை நாமே கவிழ்க்க நினைத்ததுதான். எடப்பாடி எந்தக் காலத்திலும் ராஜினாமா செய்யப் போவதில்லை. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் இருந்தால்தான் ஆட்சியைக் கலைக்க முடியும். நமக்கு அந்த எண்ணிக்கையில் ஆட்கள் இல்லாத போது, அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

தனி கட்சி?
தினகரனுக்கு தனியாகக் கட்சி தொடங்கியாவது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். இது சரியானதல்ல. குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்காமல், தனிப்பட்ட முறையில் செயல்பட நினைத்ததுதான் தவறு. இனி என்ன ஆனாலும் பரவாயில்லை. அடுத்தகட்ட வேலையைப் பார்க்க வேண்டும். அவர் எப்போது குணமாகி வருவார்னும் தெரியல' என ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார்.

அடுத்து என்ன?
தன் மீதான கோபம் குறையும்போது சசிகலாவை சந்திப்பது என்ற மனநிலையில் இருக்கிறார் தினகரன். நீட் எதிர்ப்புக்காக திருச்சியில் கூடிய கூட்டம் கூடுதல் உற்சாகத்தை தினகரனுக்குக் கொடுத்திருக்கிறது. அவரது அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தகுதி நீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏக்கள்.












Click it and Unblock the Notifications