இதுதான் காலக் கொடுமைங்கிறது.. எடப்பாடி அப்பாயின்மெண்ட்டுக்காக காத்திருக்கும் சசிகலா குடும்பம்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பாயின்மெண்ட்டுக்காக காத்திருக்கிறதாம் சசிகலா குடும்பம்.
சென்னை: அரசியலில் எதுவும் நிரந்தரமே இல்லை என்பதுதான் இப்போது அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியிடம் சில விஷயங்களை நேரில் பேச முடியாமல் தவியாய் தவிக்கிறதாம் சசிகலா குடும்பம். எடப்பாடியிடம் அப்பாயிண்ட்மென்ட்டுக்காக காத்திருக்கிறார் இளவரசி மகன் விவேக் என அடுக்கடுக்காக தகவல்கள் கிடைக்கின்றன.
சசிகலா குடும்பத்துக்குள், தினகரனுக்கும் திவாகரனுக்கும் நடந்து வந்த மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டன. நான் சொல்லும் வரையில், அனைவரும் நிதானமாக செயல்பட வேண்டும்' என்ற சசிகலாவின் கோரிக்கையை குடும்ப உறவுகள் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.
சிறைக்குள் தம்பிதுரை சந்தித்துவிட்டுச் சென்ற பின்னர், எடப்பாடி பழனிசாமியிடம் சில விஷயங்களைப் பேசுவதற்குக் சசிகலா குடும்ப உறவுகள் திட்டமிட்டிருந்தனர். ஜனாதிபதி தலைவர் தேர்தலில் ஆதரவு கொடுப்பதன் மூலம், நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்' எனக் காட்ட முயற்சித்தார் சசிகலா.
யாரும் கேட்க மாட்டார்கள்...
இதைச் சொல்லி சிரித்த டெல்லி பா.ஜ.க பிரமுகர் ஒருவர், அந்தக் குடும்பம் சொல்வதைக் கேட்டு, நமக்கு எதிராக ஓட்டுப் போட அ.தி.மு.கவில் யார் இருக்கிறார்கள்? அப்படியே இவர்கள் அழுத்தம் கொடுத்தாலும், 4 எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களிப்பார்களா?' எனக் கிண்டல் அடித்திருக்கிறார்.
லெட்டர் பேடு கட்சி..
ஆட்சி அதிகாரமே, பா.ஜ.க பக்கம் இருக்கும்போது, நம்முடைய அறிக்கையெல்லாம் பெயர் அளவுக்குத்தான். ஒருகட்டத்தில், நம்மை லெட்டர் பேடு கட்சியாகவே பா.ஜ.க அரசு மாற்றிவிடும்' என பீதியோடு பேசுகின்றனர் சசிகலா உறவுகள். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான ரிவியூ மனுவை, மலை போல நம்பியிருக்கிறார் சசிகலா. நான் வெளியில் வர வேண்டும் என்றால், எடப்பாடி நினைத்தால்தான் முடியும். அவரிடம் பேசுங்கள்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கூறியிருக்கிறார் சசிகலா.
எடப்பாடி நிராகரிப்பு
அவர்களோ, நாங்கள் சொல்வதை எல்லாம் அவர் கேட்பதில்லை. உனக்கு என்ன வேண்டுமா, வாங்கிக் கொள். அரசியல் சூழல்கள் சரியில்லை' என்றதோடு முடித்துக் கொள்கிறார். குடும்ப ஆட்களை விட்டு பேசச் சொல்லுங்கள்' எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தூதரான விவேக்
இதையடுத்து, இளவரசியிடம் பேசிய சசிகலா, தினகரனோ, திவாகரனோ பேசினால், ஆட்சியில் உள்ளவர்கள் கேட்பதில்லை. இவர்கள் நேரிடையாக சந்தித்துப் பேசினாலும், தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும். எதிலும் தலையிடாமல் இருப்பது விவேக் மட்டும்தான். எடப்பாடிக்கும் விவேக் மீது மரியாதை இருக்கிறது. உடனடியாக சந்தித்துப் பேசச் சொல் எனக் கூறியிருக்கிறார்.
எடப்பாடி நிராகரிப்பு
இதன்பின்னர், எடப்பாடியிடம் பேசுவதற்கு முயற்சி செய்தார் விவேக். ஒவ்வொரு முறையும், அந்தத் தம்பி என்னிடம் பேசியதே இல்லை. நான் அவரை ரொம்பவும் மதிக்கிறேன். மற்றவர்களைப் போல, அதட்டல் வேலைகளிலும் ஈடுபட்டதில்லை. எதுவாக இருந்தாலும் போனில் பேசச் சொல்லுங்கள். இப்போதைக்கு நேரில் சந்திக்க வேண்டாம் என உறுதியாகக் கூறிவிட்டார் பழனிசாமி.
விவேக் காத்திருப்பு
இதற்குப் பதில் அளித்த விவேக் தரப்பினர், அண்ணே...எல்லா விஷயங்களையும் போனில் பேசிவிட முடியாது. சில விஷயங்களை நீங்கள் நினைத்தால்தான் சாதிக்க முடியும். நேரில் பேசி முடிவுக்கு வருவோம் எனக் கறார் காட்ட, விரைவில் சொல்லி அனுப்புகிறேன் என ஜகா வாங்கிவிட்டார். எடப்பாடியின் அப்பாயிண்மென்ட்டுக்காக, காத்திருக்கிறார் விவேக்.
காலத்தின் கோலம்!