அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை அருகே ரிசார்ட்டில் சிறை வைத்த மன்னார்குடி கோஷ்டி! செல்போன்கள் பறிப்பு!
அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேருந்துகளில் அழைத்துச் சென்று சென்னை அருகே உள்ள கூவத்தூரில் சிறை வைத்திருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. அவர்களது செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளன.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகே கூவத்தூர் உள்ள ரிசார்ட்டில் சிறைபிடித்து வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு குடும்பத்தினர் யாருடனும் பேசக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது மன்னார்குடி கோஷ்டி.
அதிமுக பொதுச்செயலர் பதவியை கபளீகரம் செய்த சசிகலா, முதல்வராகவும் பேராசைப்பட்டார். எந்த நேரத்திலும் முதல்வராகிவிடுவார் என கூறப்பட்ட நிலையில் திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இது அதிமுகவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலுமே பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சோழவந்தான், ஊத்தங்கரை, கவுண்டம்பாளையம், வாசுதேவநல்லூர்,ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
ரிசார்ட்டில் சிறைவைப்பு
இந்தக் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக ஏற்பதாக எம்.எல்.ஏ.க்களிடம் கடிதம் எழுதி வாங்கப்பட்டதாம். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 3 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே என்ற ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
செல்போன்கள் பறிமுதல்...
அவர்களது செல்போன்களையும் மன்னார்குடி கோஷ்டி பறித்துக் கொண்டது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் கண்காணிக்க 4 அடியாட்களையும் நியமித்திருக்கிறது இந்த கோஷ்டி.
டெல்லி விசிட்
மகாபலிபுரம் அல்லது புதுச்சேரியில் பேருந்துகளிலேயே எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்னர். இதனிடையே டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திக்க இருந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது மன்னார்குடி கோஷ்டி.