அண்ணன் மகன் மகாதேவன் மரணம்.. பரோலில் வர விரும்பாத சசிகலா
அண்ணன் மகன் மகதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலா நடராஜன் சுப்ரீம் கோர்ட்டில்தான் பரோல் கேட்க வேண்டும் என்பதால் அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை: சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தஞ்சையில் வசித்து வந்தவர். மகாதேவன் மீது சசிகலா மிகுந்த பாசம் வைத்தவர் என்பதால், அவரின் இறுதி சடங்கில், சசிகலா கலந்துகொள்வாரா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. ஆனால் அவர் பரோலுக்கு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அதை விரும்பவில்லையாம்.
மகாதேவன் காலமான செய்தி, சிறையிலுள்ள சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டது. சிறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சசிகலாவிடம் தகவலை தெரிவித்துள்ளார். மகாதேவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
முதல் ரத்த சொந்தம்
ஆனால் சிறை நிர்வாகமோ, "சிறைக் காவலில் இருக்கும் குற்றவாளியின் உறவினர் உயிரிழக்கும் பட்சத்தில், இறந்தவர் குற்றவாளியின் முதல் இரத்த சொந்தமாக இருந்தால் மட்டுமே, அவருக்கு பரோலில் நிபந்தனையின் படி வெளியே வர அனுமதி வழங்கப்படும்" என அறிவித்து, சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
நீதிமன்ற அனுமதி
அதே சமயம் அவர் மகாதேவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி, அனுமதி பெறலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்
எனவே, மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலா விரும்பினால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் பரோல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சசிகலாவின் வழக்கறிஞர்கள் மூலம் இந்த விண்ணப்பம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போக வேண்டும். எனவே இதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியானது. எனினும் சசிகலா பரோலில் வர விரும்பவில்லையாம். நாளை மகாதேவன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் உதவி
இதனிடையே, அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கூறுகையில், மகாதேவன் மரணமடைந்த செய்தி, சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாதேவன் இறுதி சடங்கில், சசிகலா பங்கேற்க விரும்பினால், அவர் பரோலில் வெளிவர தேவைப்படும் ஏற்பாடுகளை செய்துதர தயாராக உள்ளேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.