சசிகலாவின் கனவு நொறுங்கியது... எடப்பாடியாரை அதிமுக எம்எல்ஏக்களின் தலைவராக முன்மொழிந்த நாள் இன்று....
சசிகலா முன்மொழிந்ததை அடுத்து சட்டசபை குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நாளும் இன்றுதான்.
Recommended Video
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டசபை குழு தலைவராக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முன்மொழிந்ததும் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அனுப்பிய நாள் இன்றுதான்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியையும் , ஆட்சியையும் தன் வசப்படுத்திக் கொள்ள சசிகலா கடும் முயற்சி மேற்கொண்டார். அதன்படி கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் தான் முதல்வராகியே தீர வேண்டும் என்ற ஆசையில் தனது ஆதரவாளர்களை சசிகலா தூண்டிவிட்டதால் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.
இதையடுத்து சசிகலாவை சட்டசபை குழுவின் தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்ததை அடுத்து ஓபிஎஸ்ஸை நிர்பந்தம் செய்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். பின்னர் சசிகலாவுக்கு எதிராக பன்னீர் செல்வம் வெகுண்டெழுந்ததாலும் தனது பதவி வெறியினாலும் கூவத்தூர் கூத்துகளை அரங்கேற்றினார்.
சிரிப்பாய் சிரித்தது
மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் பேசுவதற்காக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களோ கூவத்தூரில் கூத்தடித்துக் கொண்டிருந்ததை பார்த்து மற்ற மாநிலங்கள் சிரிப்பாய் சிரித்தன. எல்லாம் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரைதான் சசிகலாவின் ஆட்டம் என்று மகிழ்ந்தனர். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் சொத்துக் குவிப்பு வழக்கில் தனித்தனியாக தீர்ப்புகளை எழுதினர்.
சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது
அதில் இருவரும் ஒரே மாதிரியான தீர்ப்பை எழுதினர். அதாவது சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்த தீர்ப்பை உறுதி செய்தனர். அத்துடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
இந்த தீர்ப்பை அடுத்து சசிகலா தலைமையில் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டசபை குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முன்மொழிந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதினார்.
எடப்பாடி நம்பிக்கை
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று காத்திருப்பதாகவும் ஆளுநர் அழைத்ததும் எம்எல்ஏக்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி வகிக்க வழி சசிகலா வழி ஏற்படுத்திக் கொடுத்த நாள் இன்றுதான்.