சசிகலாவை நீக்கியது இவங்களா இருக்கலாம்.. ஆனால் அடித்தளம் போட்டது சசிகலா புஷ்பா!
அதிமுக பொதுக்குழு தற்போது சசிகலாவை கட்சி பதவியில் இருந்து நீக்கினாலும் இதற்கு அடித்தளம் போட்டதே சசிகலா புஷ்பாதான்.
Recommended Video
சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்கு அடித்தளம் போட்டவர் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாதான்.
சென்னையில் இன்று அதிமுகவின் அம்மா, புரட்சி தலைவி அம்மா அணிகள் இணைந்து பொதுக்குழுவை கூட்டின. இதில் அதிமுகவில் பொதுச்செயலர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும் அப்பதவியில் இருந்து சசிகலா நீக்காப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கடந்த முறை கூடியபோது சசிகலாவை நிரந்தர பொதுச்செயலராக நியமித்திருந்தால் தற்போது இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. அவசரகோலத்தில் பொதுச்செயலராக 'நியமிக்கப்பட்டதாலே' அவரது நியமனத்தை இன்றைய பொதுக்குழு எளிதாக செல்லாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பொதுச்செயலராக முயற்சித்த சசி
கடந்த பொதுக்குழுவில் சசிகலாவை அவசரகோலத்தில் நியமிக்க காரணமாக இருந்தது சசிகலா புஷ்பாதான். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வர ஆசைப்பட்டார் சசிகலா.
சசிகலா புஷ்பா எதிர்ப்பு
இதற்காக மூத்த நிர்வாகிகளை கார்டனுக்கே வரவழைத்து, சசிகலா தலைமையை ஏற்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார். இதனை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்தவர் சசிகலா புஷ்பா எம்.பி மட்டும்தான்.
டெல்லியில் போராட்டம்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, முதல்வரைச் சுற்றி சதிவலை நடக்கிறது. அவரது கையெழுத்தைப் போலியாகப் போட்டு பதவிக்கு வர முயற்சி செய்கிறார் சசிகலா' என அதிர வைத்தார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார்.
பொதுச்செயலர் பதவிக்கு போட்டி
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் சசிகலா புஷ்பா. அத்துடன் பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு வாங்குவதற்காக தன்னுடைய கணவர் லிங்கேஸ்வர திலகனை அனுப்பி வைத்தார் சசிகலாபுஷ்பா.
கணவர் மீது தாக்குதல்
அதிமுக தலைமைக் கழகத்துக்கு வந்த திலகனை, அ.தி.மு.க பிரமுகர் சிந்து ரவிச்சந்திரன் தலைமையிலான ஆட்கள் அடித்து விரட்டினர். வாயில் ரத்தம் வடிய லிங்கேஸ்வர திலகன் அடி வாங்கிய காட்சியைக் கண்ட சசிகலா புஷ்பா, இந்த அராஜகத்துக்கு அந்தக் குடும்பம் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனக் கொந்தளித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தார்.
டென்ஷனில் நியமனம் ஓகே
இதனால் தேவையற்ற சர்ச்சைகள் வருவதை அறிந்த சசிகலாவும், நியமன பொதுச் செயலாளராக தற்காலிகமாக தேர்வு செய்யப்படுவதற்கு ஒப்புதல் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தனர். அந்தநேரத்தில், தற்காலிகமாக தேர்வு செய்யாமல், சசிகலாவை நிரந்தரமாகத் தேர்வு செய்திருந்தால் தற்போது அவரை நீக்கியிருக்க முடியாது.
தடுமாறிய சொந்தங்கள்
அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளர் பதவி என்பது உச்சகட்ட அதிகாரம் வாய்ந்தது. சசிகலா நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் செல்வதற்கு முன்பாகவே, சசிகலா புஷ்பா சென்றார். தொடர்ந்து சட்டரீதியாகவும் போராடி வந்தார். சசிகலா புஷ்பாவை சமாதானப்படுத்த முடியாமல் மன்னார்குடி உறவுகள் திணறினர். அவரைப் பற்றிய அவதூறுகளை நமது எம்.ஜி.ஆரில் வெளியிட வைத்தனர். உன்னுடைய பூக்கடை சமாச்சாரங்களைச் சொல்லவா?' எனக் கட்டுரையே எழுதினர். தொடர்ந்து, சசிகலா புஷ்பாவைப் பற்றி கொச்சையான வார்த்தைகளில் சுவரொட்டி ஒட்டினர். இதனால் ஆவேசமான சசிகலா புஷ்பா, மன்னார்குடி குடும்பம் குறித்து பா.ஜ.க தலைமையின் கவனத்துக்குப் புகார்களை எடுத்துச் சென்றார். ' கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட சசிகலா கிடையாது. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டாலும், அவருடைய பெயர் இடம் பெறுவதை ஜெயலலிதா விரும்பியதில்லை' என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டார்.