நான் தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன் - சசி தம்பி திவாகரன் 'திகுதிகு'
சசிகலாவை அரசியலில் இருந்து நீக்கம் செய்யும் முயற்சி நடப்பதால் நான் தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன் என சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியுள்ளார்.
தஞ்சை: சசிகலாவால் பதவி சுகம் அனுபவிப்பவர்கள் அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் இருப்பதால் நான் தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன் என சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியுள்ளார்.
சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு என்ற பெயரில் மிகப்பெரிய துரோகத்தையும் சூழ்ச்சியையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்து செய்துள்ளனர். தினகரனுக்கு தற்போது 25 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
நேற்று நடந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் மேலும் 6 எம்எல்ஏக்கள் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது துரோகத்துக்கு நாங்கள் துணை போக மாட்டோம் எனக் கூறியுள்ளனர். இந்த இணைப்பு என்பது பதவி சுகத்திற்கான சந்தர்ப்பவாத இணைப்பாகும். இவர்களின் இணைப்பு கட்சியை மேலும் சிதறடிக்கவே உதவும். தற்போது அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்துள்ளனர்.
நாங்கள் கட்சியை மீட்போம்
யாரோ கொடுத்த சாவிக்கு பொம்மை போல தலையாட்டிக் கொண்டிருக்கின்ற இந்த அமைச்சர்களும் மற்ற சிலரும், சாவி தீர்ந்தவுடன் பொம்மைகள் போல தானாக கீழே விழுந்து விடுவார்கள். அதன் பின்னர் நாங்கள் உண்மையான கட்சியை மீட்டு வழி நடத்துவோம்.
நான் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன்
இனி தினகரன் தலைமையிலான அதிமுகவினர், அதிமுக அம்மா அணியாக தொடர்ந்து செயல்படுவார்கள். சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. என் சகோதரி சசிகலாவால் இன்றைக்கு பதவி சுகம் அனுபவிப்பவர்கள் அவரை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த முயலும் சூழலில், நானே நேரடி அரசியலில் ஈடுபட முடிவு செய்து நேற்றிலிருந்து தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்.
எடப்பாடி அரசு...ஊழல் அரசு!
எடப்பாடி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்த அரசாக மாறிவிட்டது. உதாரணமாக மின் இணைப்பு தட்கல் முறையை அறிவித்து பல லட்ச ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.
திமுக கூட சேர்ந்து போராடுவோம்
காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சி உள்பட தமிழகத்தில் யார் போராடினாலும் அத்தகைய போராட்டக்களத்தில் முதல் ஆளாக நின்று நான் போராடுவேன். காவிரி உட்பட பல்வேறு விஷயங்களில் இந்த அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இதனைத்தான் எதிர்க்கட்சிகள், தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து போராடி வருகின்றன. எனவே எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி அதில் நாங்கள் பங்கேற்போம். அதுபோன்ற போராட்டங்களை திமுகவே நடத்தினாலும் நான் பங்கேற்பேன்.
மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்
தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அவரது அரசியல் நிலைப்பாடு. அவர் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலை கையில் எடுக்கமாட்டார். அந்த வகையில் மு.க.ஸ்டாலினை மனதார பாராட்டுகின்றேன்.
ஓபிஎஸ் என்றால் துரோகம்
அதே நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், எடப்பாடி பழனிசாமி ஆதரவு கேட்டால் அதுகுறித்து யோசித்து முடிவெடுப்போம். துரோகம் நம்பிக்கையற்றத் தன்மையின் உதாரணம் ஓபிஎஸ்.
தனபாலை முதல்வராக்கியிருக்க வேண்டியது
ஓபிஎஸ்ஸுக்கு பிறகு, தனபாலை முதல்வராக்கி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை ஆட்சியில் அமர்த்தலாம் என முடிவு செய்தோம். எங்களுக்கு குறித்த நேரத்தில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் எடப்பாடி பழனிசாமியை சசிகலா அறிவித்து விட்டார். அதுதான் அவர் செய்த தவறு என்றார்.
இவ்வாறு திவாகரன் கூறினார்.