2012க்கு பிறகு சசிகலா ஆதிக்கத்தை திடீரென குறைத்தார் ஜெ.. கிருஷ்ணபிரியா பரபர வாக்குமூலம்
Recommended Video

சென்னை: அதிமுக மற்றும் தமிழக அரசியலில், செல்வாக்குமிக்கவராக இருந்த சசிகலாவின் ஆதிக்கத்தை, 2012க்கு பிறகு ஜெயலலிதா வெகுவாக குறைத்துவிட்டதாக இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளாராம்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவுடன் தொடர்புள்ள பலரும் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.

வாக்குமூலம்
இதேபோல இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவும் வாக்குமூலம் அளித்தார். இளவரசி தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணபிரியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்வாக்கு
இதுகுறித்து கூறப்படுவதாவது: அதிமுக கட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் சசிகலா மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருந்தார். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது சசிகலாதான். அரசு பணியிடமாற்றங்களிலும் சசிகலா ஆதிக்கம் செலுத்தினார்.

கட்டுப்பாட்டில் உயர் அதிகாரிகள்
கலெக்டர் முதல் அனைத்து உயர் அதிகாரிகள் நியமனமும் சசிகலா சொற்படி நடந்தது. அதிகாரிகள் நேரடியாக சசிகலாவிடம் பேசும் வகையில்தான் வைக்கப்பட்டிருந்தனர். எனவே நிழல் ராஜாங்கமே நடத்தப்பட்டது. சசிகலா கை காட்டுபவர்கள்தான் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளாக பணியாற்றினர்.

அலர்ட்டான ஜெயலலிதா
ஆனால், 2011க்கு பிறகு நிலைமை மாறியது. 2012க்கு பிறகு சசிகலாவின் ஆதிக்கம் கட்சி மற்றும் ஆட்சியில் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இவ்வாறு கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார். 2011 டிசம்பரில், சசிகலாவை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியதோடு, போயஸ் இல்லத்தில் இருந்தும் வெளியேற்றினார். ஆனால், சில மாதங்களுக்கு பிறகு சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. ஆட்சியை பிடிக்க சசிகலா சதி செய்ததாக அப்போது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications