ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன்.. அவரது தொகுதியிலேயே போட்டி… அதிமுகவினர் அதிர்ச்சி
அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று டிடிவி தினகரன் தலைமையில் கூடியது. அதில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சசிகலா அணி அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று அதிமுக ஆட்சிமன்றக் குழு இன்று அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா உடல் நலமின்றி மரணம் அடைந்தார். இதனால் ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி அங்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதை அடுத்து, எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியது. அதிமுக இரண்டாக பிளவுபட்டிருப்பதால் ஓபிஎஸ் அணியினர் தங்களது வேட்பாளரை அறிவிக்க தயாராகி வரும் வேளையில், அதிமுகவின் சசிகலா அணியினர் அவர்களது வேட்பாளராக தேர்ந்தெடுக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று கூடியது.

ஆட்சிமன்றக் குழு
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கூடியுள்ள ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, வேணு கோபால், ஜஸ்டின் செல்வராஜ் ஆகிய ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டிடிவி தினகரன் அறிவிப்பு
கூட்டத்தின் முடிவில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் செங்கோட்டையன் இதனை செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதனையடுத்து ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

ஜெ. தொகுதியில் தினகரனா?
ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட தினகரன் தற்போது, அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். ஏற்கனவே அதிமுக உறுப்பினராகவே இல்லாத தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பஞ்சாயத்தே இன்னும் தீராத நிலையில் மீண்டும் ஜெயலலிதாவின் தொகுதியிலேயே தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவினர் அதிர்ச்சி
டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட உடன் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக ஆர்.கே. நகர் அதிமுகவினர் என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்து வருகின்றனர். தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தொகுதி மக்களிடம் எப்படி கேட்பது என்றே தெரியவில்லை என்று அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications