ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்.. மோடிக்கு சசிகலா மீண்டும் கடிதம்
ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரி சசிகலா பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், காட்சிப் பட்டியலில் இருந்து காளையை நீக்கி சட்டத் திருத்தம் கொண்டு வந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது விலங்குகள் துன்புறுத்தப்படுவது கிடையாது என்றும் சசிகலா மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் தலைமையிலான அதிமுக எம்பிக்கள் குழு, இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தேவ்வை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளது.
பொங்கலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.