அடேங்கப்பா! ஜெ.வின் உத்தரவை 'துணிச்சலாக' மீறி அதிமுகவை அதிர வைத்த சசிகலா புஷ்பா!
சென்னை: தமிழக அரசியலில் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்றோர்தான் ஜெயலலிதா மீது புகார் கூறியிருக்கிறார்கள்... புரட்சியில் குதித்துள்ளார்கள்... அவர்கள் ஜெயலலிதாவுக்கு வலது கரமாக இருந்தவர்கள்... ஆனால் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டு ராஜ்யசபா எம்.பி. போன்ற உயர் பதவியை பெற்ற சசிகலா புஷ்பா அதிரடியாக ராஜ்யசபாவில் அவர் மீதே பரபரப்பு புகார் கூறியது யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.. அதிமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.
தூத்துக்குடி அதிமுகவில் பத்தோடு பதினொன்றாக இருந்தவர் சசிகலா புஷ்பா. தென் தமிழகத்து சர்ச்சைக்குரிய தொழிலதிபர் உதவியால் அதிமுகவில் திடீரென ஏறுமுகம் கண்டார்.
தூத்துக்குடி மேயராக, அதிமுக மகளிரணிச் செயலராக, ராஜ்யசபா எம்.பி.யாக அடுத்தடுத்து விஸ்வரூபமெடுத்தார் சசிகலா புஷ்பா. இதனால்தான் என்னவோ டெல்லியில் 'தனி ராஜ்யமே' நடத்தி பெரும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருந்தார்...
சரக்கு அடிச்சேன்... அடிக்கலாமா?
அதுவும் அதிமுகவை சக நிர்வாகிகளுடன் போனில் விமர்சிக்கும் அளவுக்கு தைரியம், நேற்று நான் சரக்கு அடிச்சிருந்தேன்; சரக்கு அடிக்க வர்றியா என்றெல்லாம் 'எதற்கும்' துணிந்தவரானார் சசிகலா புஷ்பா. எல்லாம் அந்த தென்மாவட்ட தொழிலதிபரின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்கிற அசட்டு தைரியம்தான் எனவும் அப்போது கூறப்பட்டது.
திருச்சி சிவாவுடன்...
இதன்பின்னர் திமுக எம்பி திருச்சி சிவாவுடன் நெருக்கமாக சசிகலா புஷ்பா இருக்கும் சில படங்கள் வெளியாகி இருந்தன. அது மார்பிங் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இவ்வளவு களேபரத்துக்குப் பின்னரும் கூட சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்காமல்தான் இருந்தார் ஜெயலலிதா.
கார்டன் விசாரணை
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை வெளுத்து வாங்கினார் சசிகலா. இது தொடர்பான விசாரணைக்கு போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்ட பின்னர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டர் சசிகலா.
சசிகலா புஷ்பா கண்ணீர்
இன்று காலை ராஜ்யசபா கூடியபோது, சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க பேசத் தொடங்கியதுமே, திருச்சி சிவா மீதுதான் புகார் கூறுகிறார் என முதலில் நினைத்தவர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிதான் காத்திருந்தது.. தொடக்கத்தில் அவர் பேச அமளி ஏற்பட்டதால் அவரது முழு பேச்சு புரியாமல் இருந்தது...
ஜெ. மீது அடுத்தடுத்து புகார்
பின்னர்தான் அவர் அணுகுண்டுகளை அடுத்தடுத்து வீசுகிறார் என்பது புரியத் தொடங்கியது. ராஜ்யசபாவில் மிகவும் துணிச்சலாக, என்னை கட்சித் தலைவர் (ஜெயலலிதா) அறைந்தார்; ராஜினாமா செய்யுமாறு மிரட்டுகிறார்' என கதறத் தொடங்கினார். அத்துடன் அடுத்து அவர் போட்டதுதான் மிகப் பெரிய அணுகுண்டு... தாம் ராஜினாமா செய்ய விரும்பவில்லை; இந்த தேசத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என அடக்க ஒடுக்கமாக கண்ணீரும் கம்பலையுமாக அவர் பேசியது "என்னே மக்கள் சேவையின் மீது பற்று" என "சிலிர்க்க" வைத்தது!
நடந்தது இதுதான்...
அதாவது போயஸ் தோட்ட விசாரணையில் சசிகலா புஷ்பா செமையாக ரவுண்டு கட்டப்பட்டு ராஜினாமா செய்துவிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளார். ஆனால் அனைவரையும் போல தாங்கிக் கொண்டு ராஜினாமா செய்ய மறுத்து, ஜெயலலிதாவுக்கு எதிராக துணிச்சலாக ராஜ்யசபாவில் அதிரடியாக புகார் தெரிவித்திருக்கிறார் சசிகலா புஷ்பா. அத்துடன் திருச்சி சிவாவிடம் மட்டுமல்ல திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பகிரங்கமாக பேசியிருப்பதுதான் புருவத்தை உயர்த்த வைக்கிறது.
என்னதான் சர்ச்சைக்குரிய நபராக இருந்தாலும் 'யார்' தைரியத்தில் ராஜ்யசபாவில் ஜெயலலிதா மீதே புகார் கொடுத்தார் சசிகலா புஷ்பா என்பதுதான் இப்போதைய 'ஹாட்' விவாதம்..