பலாத்காரம் செய்தவனுடன் சமரசம்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
சென்னை: பலாத்கார வழக்கில் குற்றவாளியுடன் சமரசமாக செல்வதற்காக சமரச மையத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு தவறானது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை மோகன் என்பவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் 2009ஆம் ஆண்டு அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ள்து.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கடலூர் மகிளா நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு மோகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும் குற்றவாளியும் சமரச மையத்தை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
பல்வேறு பெண்ணிய அமைப்புகளும் நீதிபதி தேவதாஸ் உத்தரவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றமும், பலாத்கார வழக்கில் சமரச மையத்தை அணுக உத்தரவிட்டது சட்டவிரோதமானது...கண்டனத்துக்குரியது. இத்தகைய உத்தரவுகள் பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.