நாகர்கோவிலில் புயலால் சேதமடைந்த பள்ளி நுழைவு வாயில்... அகற்றப்படாததால் மாணவர்கள் அவதி!
நாகர்கோவிலில் புயலால் சேதமடைந்த நுழைவு வாயில் அகற்றப்படாததால் மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
நாகர்கோவில் : புயல் காரணமாக பள்ளி முகப்பு இடிந்து விழுந்ததால் பள்ளிக்குள் செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி சர்.சி.பி அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சாலையின் இருபுறமும் பள்ளி கட்டிடம் உள்ளது. இந்நிலையில் ஓகி புயலில் பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகி்றது.
அதை தற்காலிமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு பிரதான நுழைவு வாயிலில் மரம் விழுந்து நுழைவு வாயில் உடைந்தது. ஆனால் உடைந்த நுழைவு வாயில் சரி செய்யப்படவில்லை. இதனால் நுழைவு வாயில் கேட்டை திறந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் சாலையின் மறுபுறம் உள்ள வகுப்பறை கட்டிடத்தில் அமரவைக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து மாணவர்களும் அங்கு அமர வைக்கப்பட்டுவதால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.