டிச.25ல் பள்ளிகளில் நல்லாட்சி தினம் அனுசரிப்பு: மத்திய அரசு உத்தரவால் கிறிஸ்துமஸ் விடுமுறை 'கட்'!
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 25ம்தேதியை தேசிய நல்லாட்சி தினமாக மத்திய அரசு கொண்டாட உள்ளதால், பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்தாகிறது.
ஏசு கிறிஸ்து பிறந்த நாளை டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அன்றையதினம்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்ததினமும் ஆகும். வாஜ்பாய் பிறந்த தினத்தை தேசிய நல்லாட்சி தினமாக கொண்டாட மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக கட்சி முடிவு செய்துள்ளது.
நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களை முந்தைய ஆட்சிகள் முன்னிலைபடுத்தியதற்கு பதிலடியாக, வாஜ்பாயை முன்னிறுத்தும் பாஜகவின் அரசியல் காய் நகர்த்தலாக இது வர்ணிக்கப்படுகிறது. இதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. நல்லாட்சி தினத்தை கொண்டாடுவதற்காக, டிசம்பர் 25ம்தேதி மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அன்றைய தினம் மாணாக்கர்களுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளை திறந்தால் அது அம்மக்களை புண்படுத்தும் செயலாக அமைந்துவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 25ம்தேதி கட்டுரை போட்டி மட்டுமே நடக்கும் என்றும், கிறிஸ்துமஸ் பண்டிகை ரத்தாகாது என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.