தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், நாளை ஜூன் 1ம் தேதி வழக்கம் போல திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக இயல்பு நிலை திரும்பி உள்ளது மற்றும் சட்ட ஒழுங்கு முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்நீதிமன்ற அறிவிப்பின்படி, இரண்டு தடயவியல் நிபுணர்கள், எயிம்ஸ் அல்லது ஜிப்மர் டாக்டர்கள் அடங்கிய குழுக்கள் இன்று மாலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
அவர்கள் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் முன்னிலையில் , அரசு மூத்த மருத்துவர்கள், மரணமடைந்த 7 நபர்களின் உடல்கள் மறு உடற்கூராய்வு செய்ய உள்ளார்கள். பின்னர், குடும்பத்தினரிடம் உடல்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீதி உள்ள 6 நபர்களின் உடல்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி , மேலும், ஒரு வார காலத்திற்கு பதப்படுத்தி வைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ20 லட்சமாகவும்,பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, இதுவரை பலத்த காயமடைந்த 40 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் , சிறிய
காயமடைந்த 23 நபர்களுக்கு தலா ரூ.150 லட்சமும் என மொத்தம் 63 நபர்களுக்கு ரூ.2.34 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் நாளை ஜூன் 1ம் தேதி வழக்கம் போல திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.