காவிரி பிரச்சினை: தமிழகத்தில் கர்நாடகா பேருந்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: பெங்களூருவில் தமிழக பேருந்துகள் எரிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் அதேபோல சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடாத வகையில் கர்நாடக பேருத்துகளுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனை காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடகவில் மாறி மாறி மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதன் உச்சகட்டமாக பெங்களூருவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தில் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க அம்மாநில பேருந்து மற்றும் லாரிகளுக்கு தமிழக போலீசார் பலத்த பாதுப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். பேருந்துகள் அம்மாநில எல்லைக்குள் செல்லும் வரை முன்னாள் ஒரு வாகனமும், பின்னால் ஒரு வாகனமும் பாதுகாப்புக்கு சென்று வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், கர்நாடகா பதிவு எண் கொண்ட பேருந்து, லாரிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைக்குரிய பகுதிகளை அவைகள் தாண்டும் வரை, நமது அதிகாரிகள் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்குவார்கள். அதேபோல வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அமைதிகாக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை நிலைமை எங்கள்கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.