கூட்டுறவு வங்கிகளில் பணத்தை மாற்றிய சேகர் ரெட்டி... காட்டிக்கொடுத்த டைரி
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம்தான் அவர் பணத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளார். இதற்கு கூட்டுறவு வங்கியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் அதிக அளவில் உதவி செய்துள்ளனர். இந்த தகவல் சேகர் ரெட
சென்னை: கள்ள நோட்டு, கருப்பு பணத்தை ஒழிக்க, நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ரூ 500 , 1000 செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி. செல்லாத ரூ 500, 1000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், அல்லது அவரவர் கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று கூறினார்.
நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரையில் தமிழக கூட்டுறவு வங்கிகளில் செல்லாத நோட்டுகள் அதிகமாக வருவதை தெரிந்த ரிசர்வ் வங்கி, தமிழக கூட்டுறவு வங்கி இயக்குநருக்கு அவசர உத்தரவு ஒன்றை வழங்கியது.
அதில் தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணம் விநியோகம் செய்யலாம், ஆனால் செல்லாத பணத்தை வாங்கக்கூடாது என்றும், 14ஆம் தேதி முதல் செல்லாத பணத்தை வாங்கினால் ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியது.
சேகர் ரெட்டி
ரூ.131 கோடி கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக கைதான சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பல்வேறு அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு உதவியுள்ளனர். எனவேதான் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மறுகணமே இவரது வீட்டுக்கு கட்டுக்கட்டாக புதிய நோட்டுகள் வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
புத்தம் புதிய கரன்சிகள்
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், அந்த நோட்டுகள் திண்டுக்கல் பகுதியில் இருந்து சேகர் ரெட்டிக்கு சப்ளை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது போன்ற ரூபாய் நோட்டுகளை மாற்ற திண்டுக்கல்லில் உள்ள தனியார் மற்றும் அரசு வங்கி அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இதற்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் உதவி உள்ளனர். பணத்தை மாற்றிக் கொடுக்க திண்டுக்கல்லைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள் கமிஷன் பெற்றுள்ளனர்.
அதிர்ச்சியில் அதிகாரிகள்
சேகர் ரெட்டிக்கு எந்தெந்த வங்கி அதிகாரிகள் பணத்தை மாற்றிக் கொடுத்துள்ளனர்? எந்த வங்கியில் இருந்து மாற்றப்பட்டது? என்பதை வருமானவரித்துறையினர் ரகசியமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது சேகர் ரெட்டி சிக்கியுள்ளதால் பண பரிமாற்றத்துக்கு உதவிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
டைரியில் தகவல்
எந்தெந்த கூட்டுறவு வங்கியில் பணம் மாற்றப்பட்டது. யாருக்கு எவ்வளவு பணம் புது நோட்டுக்கள் கமிஷனுக்கு வழங்கப்பட்டது என்பது பற்றி தேதி வாரியாக எழுதி வைத்துள்ளாராம் சேகர் ரெட்டி. இந்த தகவலின் அடிப்படையில் இப்போது விசாரணை தொடங்கியுள்ளது. ஜெயலலிதா சமாதியில் சேகர் ரெட்டியுடன் அமைச்சர்கள் சில பேசிக்கொண்டிருந்த விசயமும் தற்போது தெரியவந்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள்
சேலம், கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் செல்லாத பணத்தை டெபாசிட் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்துகொண்டு, இன்றுவரையில் விசாரணை செய்துவருகிறார்கள் அமலாக்க பிரிவு அதிகாரிகள். பல கோடி ரூபாய் பணம் கை மாறியுள்ளதையும் கண்டு பிடித்துள்ளனர்.
தொடரும் ரெய்டு
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்ட செல்லாத பணத்தையும், வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் லிஸ்ட் எடுக்கபட்டு, முறைகேடுகள் நடந்துள்ள கூட்டுறவு வங்கிகளை நோக்கி ரெய்டு நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.