தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் மோடி அலை எடுபடாது: நாராயணசாமி தாக்கு
புதுச்சேரி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடியின் அலை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவை மாநிலம் திருபுவனை (தனி) தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அங்காளன். இவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து கட்சியின் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். அதோடு ராஜினாமா கடிதத்தையும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் அளித்தார். அதனை ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகி வருகிறது. என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2ம் கட்ட தலைவர்கள் அந்த கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் புதுச்சேரி வர வாய்ப்பு உள்ளது என்றார்
மேலும், நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடியின் அலை ஒரு சதவீதம் கூட இல்லை. மோடி அரசை மக்கள் தூக்கி எறி தயார் ஆகிவிட்டனர். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மோடி அலை எடுபடாது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.